Ad Code

Responsive Advertisement

முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கான மாதாந்திர உதவி பெறுவதற்காக, விதிமுறைகளை, தமிழக அரசு தளர்த்தி உள்ளது. வருமான வரம்பு, 5,000 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன் பெறலாம். வாரிசுகள் இருந்தாலும், ஆதரவில்லை என்றால், தாராளமாக முதியோர் உதவி கிடைக்கும்.
உதவித்தொகை:

தமிழகத்தில், உழைக்க முடியாத நிலையில் உள்ள முதியோர், ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. முன், 600 ரூபாயாக இருந்த உதவித்தொகை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது வரவேற்பைப் பெற்றாலும், வசதி படைத்தோரும், தகுதி இல்லாதோரும், பணம்பெற வழிவகுத்தது. 'அம்மா திட்டம்' முகாம்களும், ஊக்கம் அளித்ததால், பயனாளிகளின் எண்ணிக்கை, 36 லட்சம் வரை உயர்ந்தது. 'பயன் பெறுவோரில் போலிகள் அதிகம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும், தாலுகா வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு, 5 லட்சம் வரை போலிகள் நீக்கப்பட்டனர். இதனால், பயனாளிகள் எண்ணிக்கை, 31.5 லட்சம் அளவில் குறைந்தது. 'புது விண்ணப்பங்களையும், இஷ்டம் போல் அனுமதிக்கக் கூடாது; முறையாக விசாரித்து, தகுதி இருந்தால் மட்டுமே, பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, கிடுக்கிப்பிடி போடப்பட்டது. ஏற்கனவே பயன்பெற்று வந்த பல லட்சம் பேர் நீக்கப்பட்டதும், புதிய விண்ணப்பங்களுக்கான கிடுக்கிப்பிடியும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது, அரசுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தும் என, ஆளுங்கட்சி கருதியது.

அரசாணை:

சட்டசபைத் தேர்தலில், இது சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால், மாதாந்திர உதவிக்கான விதிமுறைகளை, தமிழக அரசு தளர்த்தி உள்ளது.

* வருமான வரம்பு, 5,000 ரூபாய்க்குள் என்று இருந்ததை, 50 ஆயிரம் ரூபாய்க்குள் என, 10 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன்பெறலாம். 


* வாரிசுகள் இருந்தாலும், அவர்களால் பயனில்லை என்றால், மாதாந்திர உதவி பெற, முதியோர் தகுதி பெறுவர்.


* எல்லா விதமான உதவித்தொகை திட்டத்திலும், 'ஆதரவற்றோர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.


* மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளில், 'வேலை செய்ய முடியாத தன்மை' என்ற பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. 60 சதவீத பாதிப்பு உள்ள, அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.


* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டோர் மாதாந்திர உதவி பெற, 'மகன், மகள் ஆதரவு இல்லாமல் இருந்தால்...' என்ற விதிமுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வருவாய்த் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டு வருவாய், 5,000 ரூபாய் என்பது, 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. காலத்திற்கேற்ப, 50 ஆயிரம் ரூபாய் என, அரசு திருத்தம் செய்துள்ளது. உண்மையில், பாதிக்கப்பட்டுள்ளோர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால், கிராமப்புறங்களில் உள்ள, குடிசைவாசிகள் பயன்பெறுவர். பயனாளிகள் எண்ணிக்கை, ஐந்து லட்சம் வரை கூட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

நிதிச்சுமையை சமாளிக்க முடியுமா?

தமிழக அரசுக்கு, கடந்த நிதியாண்டில், வரி வகையிலான வருவாய் மட்டும், 91,835 கோடி ரூபாய் இருக்கும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. வணிகவரி, பத்திரப்பதிவு உள்ளிட்ட வரி வருவாய், இலக்கை எட்ட முடியாத அளவில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இலக்கை, அரசு, 85,772 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டது. பொங்கல் பரிசு தர முடியாத அளவில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழலில், சமூக பாதுகாப்பு திட்ட விதிமுறைகளில் தளர்வால், மேலும் நிதிச்சுமை ஏற்படும். இதை, எப்படி அரசு சமாளிக்கும் என, தெரியவில்லை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement