கூராளுமையினால் வார்க்கப்பட்ட தலைமைத்துவமென்பது அனைவருக்கும் கைவரா. இதன் சாத்தியம் எங்கு நிகழ்த்தப்படுகிறதோ அங்கு வெற்றிச்சூழல் நிலைநிறுத்தப்படுகிறது. அத்தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றல் சுகமான பேரானந்த அனுபவமாகவே துய்க்கப்படும்.அத்துய்த்தலில் சோர்வும் களைப்பும் ஏற்படாது. புதுமையின் உணர்வாட்சியில் உயிர்ச்செயல்கள் இயங்கும். எப்பொழுதும் எங்கும் அன்பின் ஆணையே பரவியிருக்கும்.
CLICK HERE TO VISIT PUDUKKOTTAI CEO SITE
தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம் புதுக்கோட்டை பள்ளிகளை உள்ளங்கையில் அடக்கியது. முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழி சற்றேறக்குறைய அனைவருக்கும் மறந்துவிட்ட்து. எனலாம். காரணம் அங்கு யாரும் செல்வதில்லை. எல்லாம் பள்ளியிலிருந்தவாறே முடிந்துவிடுகிறது. நேர்மையின் தாக்கம் எங்கும் மணம் வீசுகிறது. வெளிப்படையான தன்மை உண்மையின் உரைகல்லாய் எழுந்து நிற்கிறது.
மேனிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரும் கடைக்கோடி இளைய ஆசிரியரும் சந்திப்பதில் பொதுத்தன்மையே இங்கு நிலவுகிறது. பணித்தீண்டாமை இங்கு ஒழிக்கப்பட்டு விட்ட்து. பணிநிலை ஏற்றத்தாழ்வுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வெகு நாளாகிவிட்ட்து. அனைவரும் யாரும் சொல்லாமலேயே உழைக்கிறார்கள். ஆணையால் பிணைக்கப்படாமல் இயல்பாகவே தம்கடமையுணர்ந்து கற்பிக்கிறார்கள்.
ஆய்விற்குப் போகும் ஐயாவின் வகுப்பறைச் சந்திப்புகளிலெல்லாம் மாணாக்கரின் வறுமை விவாதிக்கப்படும். அறியாமையின் விரிசலில் வீழ்ந்துவிடாதிருக்கும் மனபலம் உள்புகுத்தப்படும். சமுதாயச் சமநோக்கின் வல்லமை உறுதியாக்கப்படும். இங்கு சிரித்த உதடுகளாய் ஆசிரியரும் மாணாக்கரும் வலம் வருவதே ஐயாவின் தலைமைத்துவத்திற்குச் சான்று.
நிருவாகத்திலும் கல்விமேலாண்மையிலும் சமக்கோட்டுத் தத்துவத்தின் பேராண்மையையே அவர் கையாள்வதுண்டு. இதன் நீளல், பேசப்படும் உயர்வை அவரையும் அறியாமல் அவருக்கு அளித்திருக்கிறது. கல்விப்பாடங்களில் கணினித் திரையைப் புகுத்திய அவரால் அலுவலக ஆவணங்களிலும் அந்நுண்ணாளுமையைப் புகுத்தியதை வியக்கும் விழிகளோடு பல உயரலுவலர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளார்கள்.
மறுமுனையில் தமிழ்த் தடயங்களைத் தேடியலைந்து தமிழ்த்தொன்மையை மீட்டெடுக்கும் பேரவா அவரின் ஆய்வறிவின் ஆழத்தை உணர்த்துவதோடு பணிப்பளுவை எதிர்கொள்ளும் போர்த்தந்திரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.
தமிழக வரலாற்றில் இன்று ஒரு பேரின்பத் திறவுகோல். பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் உயருழைப்பிற்குக் கிடைத்த நற்சான்று. அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இவ்வரிய பணிநேர்த்திக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இத்தருணத்தில் அவரின் தமிழாழத்தையும், தலைமைத்துவ கூராளுமையையும் அன்பு உணர்வினால் ஆளும் பணிநேர்த்தி போற்றுதலுக்குரியது
அவர் எங்கு பணிபுரினும் தம் தனியாள்கையினால் மிகச் சிறப்பான உயரிடத்தைத் தக்க வைப்பார் என்பதில் இருவேறு கருத்தில்லை.
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த ஐயா. முனைவர். நா. அருள்முருகன் அவர்களைப் போற்றி வாழ்த்துவதில் பெருமை கொள்வோம்


0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை