Ad Code

Responsive Advertisement

அரசு பிறப்பித்த ஆணையின்படி 213 மாநகராட்சி பள்ளிகளிலும் 4 மாதத்தில் அடிப்படை வசதி

நான்கு மாதத்தில் 213 மாநகராட்சி பள்ளிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
புரட்சிக்கர மாணவர்கள் இளைஞர் முன்னணியின் செயலாளர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது: தனியார் பள்ளிகளில் பெரும் தொகையை கட்டணமாக கொடுத்து படிக்க முடியாத ஏழை மாணவர்கள், அரசு பள்ளிகளில்தான் சேர்ந்து படிக்கின்றனர். சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கடந்த 2012 அக்டோபர் 22ம் தேதி தமிழக கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணலி சடையன்குப்பத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், மாணவர்கள் ஆகாஷ், சூர்யகலா ஆகியோர் 2014 ஜனவரி 10ம் தேதி படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட  வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை நிபுணர்கள் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். 2012ம் ஆண்டு கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யவேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் டி.ராஜேந்திரன் தலைமையில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், நவமணி மற்றும் பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு, சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட் நியமித்த ஆய்வுக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: சென்னையில் 284 மாநகராட்சி பள்ளிகளில், 3 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. தற்போது செயல்பட்டு வரும் 281 பள்ளிகளை ஆய்வு செய்தோம். தமிழக அரசின் அரசாணையின்படி, 281 பள்ளிகளில், 111 பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதிகள் உள்ளன. மீதமுள்ள 170 பள்ளிகளில், விரைவில் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. அதேபோல, கை கழுவும் தண்ணீர் வசதி 126 பள்ளிகளில் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 155 பள்ளிகள் விரைவில் இந்த வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது. கழிவறை வசதிகள் 269 பள்ளிகளில் உள்ளன. 12 பள்ளிகளில் இந்த வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுநீர் கழிக்கும் வசதிகள் 134 பள்ளிகளில் உள்ளது. மீதமுள்ள 147 பள்ளிகளில் இந்த வசதி செய்து கொடுக்கப்படும். மின்சாரம் பயன்படுத்தும் விதிமுறை 271 பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் வெறும் 68 பள்ளிகள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.பொற்கொடி ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த ஆய்வுக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 281 பள்ளிகளில் வெறும் 68 பள்ளிகள் மட்டுமே அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தரப்பு வக்கீலிடம் கேட்டபோது, அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் 6 மாதத்துக்குள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார். ஆனால், அனைத்து வசதிகளையும் 4 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். இதன்மூலம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது, அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

எனவே, இந்த கால அவகாசத்துக்குள் அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்துள்ளதா? என்பதை நாங்கள் கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, எந்தெந்த பள்ளிகளில், என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாதந்தோறும் அறிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற மார்ச் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement