தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணியில் உதவிப் பொறியாளர் (தொழில்கள்) பதவிக்கான நேர்காணல் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:

தொழில் சார்நிலைப் பணியில் உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 40 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி கணினி வழித்தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை 4 ஆயிரத்து 279 விண்ணப்பதாரர்கள் எழுதினர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்க நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 200 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான

ww.tnpsc.gov.in-இல் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் 82 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிக்கான நேர்காணல் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்தது.