Ad Code

Responsive Advertisement

பிஎட், எம்எட் படிப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்த மாட்டோம்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் கல்வி நிறுவனங்களுக்காக, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையை அமல்படுத்தமாட்டோம் என்று தேசிய கவுன்சில் உத்தரவாதம் அளித்துள்ளது.
தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்க செயலாளர் விஜயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பி.எட்., எம்.எட்., படிப்புகளை கொண்ட கல்வியியல் கல்லூரிகள் 670 செயல்படுகின்றன.  இந்தக் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்திடம் அங்கீகாரம் பெற்றவை. ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கென, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதிகள் தற்போது செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கும், புதிய கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அது தெரிவித்தது. மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய விதிமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தது. இந்தப் புதிய விதிமுறைகள் தேசியக் கவுன்சிலின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

அதில், பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதாக 21 நாட்களுக்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான கால அளவு ஓராண்டிலிருந்து, இரண்டு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கை என்பது, புதிய விதிப்படி 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேற் கூறப்பட்ட படிப்புகள் மட்டுமல்லாமல், இதர படிப்புகளையும் கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினால் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும். தற்போது, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் சட்டத்தை பின்பற்றி வருகிறோம். புதிய விதிகளை நடைமுறைப்படுத்தினால், தனியார் கல்வி ஒழுங்குமுறைச் சட்டத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இரண்டும் தனி தனிச் சட்டங்கள். இந்தப் புதிய விதிகளை பின்பற்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சிலுக்கு 21 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லையெனில், கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும். புதிதாக அங்கீகாரமும் வழங்க மாட்டோம் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகளை பின்பற்றினால் கல்வி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இது எங்களை மிரட்டுவது போல் உள்ளது. எனவே, புதிய விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். 21 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, வக்கீல் ஆர்.சுரேஷ் ஆகியோர் ஆஜராயினர். ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் தரப்பில் ஆஜரான வக்கீல் ராமகிருஷ்ணரெட்டி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருப்பதால், 21 நாள்களுக்குள் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்க வலியுறுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டு,  மனுவுக்கு மார்ச் 16ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேசியக் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement