Ad Code

Responsive Advertisement

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு :சட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்கிறது

தாழ்த்தப்பட்டோருக்கான, 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இவ்வழக்கை, தமிழக அரசு நடத்த வேண்டும் என, அருந்ததியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், 3 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம், தமிழக அரசால், 2009ல் இயற்றப்பட்டது. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான குழு, அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, ஆதி ஆந்திரா மற்றும் தோட்டி ஆகிய உட்பிரிவுகளை இணைத்து, அருந்ததியர் என, அறிவித்தது. மாநில அரசில் உருவாகும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், 3 சதவீதம் அருந்ததியருக்கு ஒதுக்க, அரசாணையும் இயற்றப்பட்டது.

இதுகுறித்து, அருந்ததியர் மக்கள் கட்சி நிறுவனர் ரவிசந்திரன் கூறியதாவது:அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டால், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, பிற ஜாதியினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அருந்ததியருக்கு, உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 2009 சட்டத்தை, ரத்து செய்ய வேண்டும் என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் சரவணகுமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கில், அருந்ததியர் மக்கள் கட்சி, வாதியாக உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, ரிட் மனு நிலுவையில் உள்ளதால், கிருஷ்ணசாமி மற்றும் சரவணகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவால், அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்குகள், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. இவ்வழக்குகளை, தமிழக அரசு நடத்த வேண்டும்.அப்போது தான், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள, அருந்ததிய மக்களுக்கு, உரிய நீதி கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement