Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது எப்படி? அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முந்தைய அரசாணைகள்

பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றி வந்த கிராம உதவியாளர்களை 1-6-95 முதல் முழுநேர அரசுப் பணியாளர்களாக மாற்றி அமைத்து 6-7-95 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 29-11-10 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், கிராம உதவியாளராக தொடர்ந்து 10 ஆண்டுகள் பணி முடித்த நிலையில், அலுவலக உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் தகுதியின் அடிப்படையில் 10 சதவீதம் மட்டும் பணிமாற்றம் மூலம் பதவி உயர்வு வழங்கலாம் என்று கூறப்பட்டது.

அமைச்சர் அறிவிப்பு

இந்த நிலையில், சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் கடந்த 8-8-14 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10 ஆண்டுகள் கிராம உதவியாளராகப் பணி முடித்த தற்போது தகுதியாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களில் 20 சதவீதம் பதவி உயர்வு அளித்து அந்த இடங்கள் நிரப்பப்படும்’’ என்று குறிப்பிட்டார்.

பரிந்துரை ஏற்பு

இந்த அறிவிப்புக்கு இணங்க, அதற்கான பரிந்துரையை வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் பரிந்துரைக் கடிதத்தில் அவர், கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான கிராம உதவியாளர்கள் இல்லை என்றால், அந்தக் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்தது. அவற்றை அரசு ஏற்று அதற்கான ஆணை பிறப்பிக்கிறது அமைச்சரின் அறிவிப்பு மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் வெளியிடுள்ள மற்றொரு அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓய்வூதியம்

8-8-14 அன்று சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர், “தற்போது ஓய்வூதியம் பெறும் 3 ஆயிரத்து 672 முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரம் எனவும், குடும்ப ஓய்வூதியம் பெறும் 852 முன்னாள் கிராம அலுவலர்களின் குடும்பங்களுக்கு, அந்தத் தொகையை ரூ.1,000-த்தில் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.

அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அளித்தார். அதை அரசு ஏற்கிறது. தற்போதுள்ள விலைவாசி, மருத்துவம், குடும்ப சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாகவும், அவர்களின் குடும்ப ஓய்வூதியத்தை பிற படிகளின்றி ரூ.1,500 ஆகவும் உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement