Ad Code

Responsive Advertisement

கின்னஸ் சாதனை: 4,000 மாணவர்கள் காகிதத் தொப்பி அணிந்து பங்கேற்பு


தஞ்சாவூரில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவ, மாணவிகள் காகிதத் தொப்பி அணிந்து சனிக்கிழமை பங்கேற்றனர்.

இந்தியாவில் உள்ள சலேசிய சபையைச் சேர்ந்த பள்ளிகளில் சாரண, சாரணீயர் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை போஸ்கோரி என்ற பெயரில் மாநாடு நடத்தப்படும்.

இதன்படி, தஞ்சாவூர் தொன்போஸ்கோ பள்ளியிலும், அக்ஸீலியம் பள்ளியிலும் போஸ்கோரி மாநாடு கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. இதில், நாடு முழுவதும் உள்ள சலேசிய சபையின் பள்ளிகளைச் சேர்ந்த 4,000 சாரண, சாரணீயர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நியூசிலாந்தில் சாரண, சாரணீயர்கள் 3,045 பேர் பங்கேற்று காகிதத் தொப்பி அணிந்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை முறியடிக்கும் நிகழ்ச்சி முகாமின் நிறைவு நாளான சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் தொன்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 4,000 மாணவ, மாணவிகள் தொன் போஸ்கோ அணிந்திருந்த பெரேத்தோ என்ற தொப்பியை நினைவுகூரும் வகையில், அதே வடிவில் காகிதத் தொப்பியைத் தயார் செய்து அணிந்து சுமார் 15 நிமிஷங்கள் நின்றனர்.

இந்தத் தொப்பியைச் செய்ய பழைய செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதன் மூலம் மறுசுழற்சி செய்யும் கருத்தியலையும், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டது என சலேசிய சபை சாரண இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை அசிஸ்ட் என்ற உலக சாதனை ஆய்வு மையத் தலைவர் ராஜேந்திரன், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் அருண் தாமஸ் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியை திருச்சி சலேசிய சபையைச் சேர்ந்த ஆல்பர்ட் ஜான்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement