விதியோடு நான் ஆடும் விளையாட்டை பாரு!
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். சில மாதங்களுக்கு முன், அவர் மகன் கைலாசம் இறந்தார். இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல், வயோதிக பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென, சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிக்கலான நிலையை அடைந்தார். டாக்டர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, நேற்று இரவு காலமானார். இவருக்கு, மனைவி ராஜம், மகள் புஷ்பா கந்தசாமி, மகன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர். பாலசந்தர் இறந்தது அறித்து, இயக்குனர், நடிகர்கள், சினிமா பிரபலங்களும் மருத்துவமனையில் கூடினர். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடக்கும் என, குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாலசந்தர் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார்.அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது.பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலச்சந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.
கிளார்க் பணி:
1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.
சினிமாவில் தடம்:
வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார்.அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்ப உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்னைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார்.இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன.
தயாரிப்பு நிறுவனம்:
1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்தார். வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இவரால் உருவான நடிகர்கள்:
தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி.
இவரால் வந்த நடிகைகள்:
ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.
புதுமுக நடிகர்கள் படம்:
அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இப்படம் ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் வெற்றிப்படமே.
பிறமொழி நடிகர்கள்:
பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ேஷாபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.
செஞ்சுரி:
இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 101 படங்கள் வெளிவந்துள்ளன. முதல்படம்: நீர்க்குமிழி; நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.
நாடகத்திலிருந்து சினிமாவுக்கு...:
எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிவப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.
நடிகராக அவதாரம்:
கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
ரஜினிக்கு பிடித்த படம்:
பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள்.நிறைவேறாத கனவுதமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும்' . 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார்
அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படமும் இதுவே.இந்தி படங்கள்
ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.
நான்கு மொழி:
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் படங்களை இயக்கியவர்.
'டிவி' தொடர்கள்:
தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட 'டிவி' சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.
யாருக்கு அதிக வாய்ப்பு:
*தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
*சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது.
*நூறு படங்களுக்கு மேலாக பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார்.
*பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தனது பாத்திரத்திற்காக, சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஈட்டித் தந்த படம் இது.
*பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
*ஒருமுறை "பெப்சி' தலைவராக இருந்திருக்கிறார்.
8 தேசிய விருது:
இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு இரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.
விருதுகள்:
1968,- 1993ல் - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 முதல் 1994 வரை, - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976, - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் விருது
1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1992ல் - அறிஞர் அண்ணா விருது
2008ல், - 39வது சர்வதேச திரைப்பட விழாவில், 'வாழ்நாள் சாதனையாளர் விருது'
2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.கவுரவ டாக்டர் பட்டங்களை, மூன்று பல்கலைகளிடமிருந்து பெற்றுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்:
1.நீர்க்குமிழி,
2.நாணல்,
3.மேஜர் சந்திரகாந்த்,
4.பாமா விஜயம்,
5.அனுபவி ராஜா அனுபவி,
6.எதிர் நீச்சல்,
7.தாமரை நெஞ்சம்,
8.பலே கொடலு (தெலுங்கு),
9.பூவா தலையா,
10.சட்டெகலப்பு சடேயா (தெலுங்கு),
11.இரு கோடுகள்,
12.பத்தாம்பசலி,
13.எதிரொலி,
14.நவகிரகம்,
15.காவிய தலைவி,
16.நான்கு சுவர்கள்,
17.நூற்றுக்கு நூறு,
18.பொம்மா பொருசு (தெலுங்கு),
19.புன்னகை,
20.கண்ணா நலமா,
21.வெள்ளி விழா,
22.அரங்கேற்றம்,
23.சொல்லத்தான் நினைக்கிறேன்,
24.அவள் ஒரு தொடர்கதை,
25.நான் அவனில்லை,
26.அபூர்வ ராகங்கள்,
27.மன்மதலீலை,
28.அந்துலாணி கதா (தெலுங்கு),
29.மூன்று முடிச்சு,
30.அவர்கள்,
31.பட்டின பரவசம்,
32.அயினா (இந்தி),
33.நிழல்நிஜமாகிறது,
34.மாரோ சரித்ரா (தெலுங்கு),
35.தப்பு தாளங்கள்,
36.தப்பிடா தலா (தெலுங்கு),
37.நினைத்தாலே இனிக்கும்,
38.அந்தமானிய அனுபவம் (தெலுங்கு),
39.நூல் வேலி,
40.குப்பெடு மனசு (தெலுங்கு),
41.இடி கதா காடு (மலையாளம்),
42.கழகன் (தெலுங்கு),
43.வறுமையின் நிறம் சிவப்பு,
44.அகாலி ராஜ்யம் (தெலுங்கு),
45.அடவாலு மீகு ஜோகர்லு (தெலுங்கு),
46.எங்க ஊர் கண்ணகி,
47.தொலிகோடி கூடிண்டி (தெலுங்கு),
48.தில்லு முல்லு,
49.தண்ணீர் தண்ணீர்,
50.எத் துஜே கே லியே (இந்தி),
51.47 நாட்கள்,
52.47 ரோஜூலு (தெலுங்கு),
53.அக்னி சாட்சி,
54.பெங்கியாழி அரலிடா ஹூவு (கன்னடம்),
55.பொய்கால் குதிரை,
56.ஜாரா சி ஜிங்காடி (இந்தி),
57.கோகிலம்மா (தெலுங்கு),
58.எக் நய் பகலி (இந்தி),
59.அச்சமில்லை அச்சமில்லை,
60.ஈரடு ரேகேகலு (கன்னடம்),
61.கல்யாண அகதிகள்,
62.சிந்து பைரவி,
63.முகிலே மலிகே (கன்னடம்),
64.சுந்தர ஸ்வாப்நகலு (கன்னடம்),
65.புன்னகை மன்னன்,
66.மனதில் உறுதி வேண்டும்,
67.ருத்ரவேணா (தெலுங்கு),
68.உன்னால் முடியும் தம்பி,
69.புது புது அர்த்தங்கள்,
70.ஒரு வீடு இரு வாசல்,
71.அழகன்,
72.வானமே இல்லை,
73.திலோன் கா ரிஷ்தா (இந்தி),
74ஜாதி மல்லி,
75.டூயட்,
76.கல்கி,
77.பார்த்தாலே பரவசம்,
78.பொய்.
'டிவி' சீரியல்கள்
1. ரயில் சிநேகம்,
2. மர்மதேசம்
3. காசளவு நேசம்,
4. பிரேமி
5. காதல் பகடை,
6. கையளவு மனசு
7. சஹானா,
8. சாந்தி நிலையம்
9. அண்ணி
10. ரமணி வெர்சஸ் ரமணி
11. எங்கிருந்தோ வந்தாள்
12. நிலவை பிடிப்போம்
13. ஜன்னல் 1
14. ஜன்னல் 2, உள்ளிட்ட பல சீரியல்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை