Ad Code

Responsive Advertisement

உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு

தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்கி வருகிறது.


பிளஸ் 1 வகுப்பில் சேரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற முடியும். இதற்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும். அதனைக் கொண்டு, தலைமை ஆசிரியர் "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்து, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு முன்மொழிவார். அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து அரசிடம் நிதியை பெற்று நலத்துறை மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 2,760 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற இதுவரை விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் இதற்கான விண்ணப்பம், நலத்துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மாநில அரசின் சிறப்பு உதவித் தொகையை பெற்றிட வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் கடந்தாண்டே விண்ணப்பித்து விட்டதால், அவர்களின் மனுவை இந்தாண்டு புதுப்பிப்பதில் சிக்கல் இல்லை. பிளஸ் 1 சேர்ந்துள்ள 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், இதற்கான விண்ணப்பத்தை நலத்துறை வழங்காமல், கடந்தாண்டு விண்ணப்பம் இருந்தால், அதனை நகல் எடுத்து கொடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஒரு மாணவருக்கு விண்ணப்பம் நகல் எடுக்க 5 ரூபாய் செலவாகும். ஒவ்வொரு பள்ளியிலும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருப்பதால், இந்த செலவை எந்த கணக்கில் சேர்ப்பது என புரியாமல் தலைமை ஆசிரியர்கள் காலம் கடத்தி வருவதால், பிளஸ் 1 படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் உதவித் தொகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நலத்துறை தரப்பில் விசாரித்தபோது, பிளஸ் 1 மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொடுக்க வேண்டிய விண்ணப்பம் அரசு அச்சடித்து எங்களுக்கு வழங்கவில்லை. இதனால், கடந்தாண்டில் மீதமுள்ள விண்ணப்பங்களை நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளோம். பள்ளியில் விண்ணப்பம் இல்லை என்றால், கடலூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement