இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.
ஸ்மிருதியுடன் சந்திப்பு:
பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்., சொல்வதென்ன?
*வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும்.
*நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும்.
பொறுப்பு
யார் வசம்?
கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது.
புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:
*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
*மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.
*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.
*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.
*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி படிக்கவோ செய்யலாம்.
*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.
கல்லூரி மட்ட படிப்பு:
*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.
*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.
*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை