Ad Code

Responsive Advertisement

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்

இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால், பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து, அரையாண்டு தேர்வுகள் வரும் டிச., மாதம் துவங்குகிறது.

கடந்த அக்., மாதத்தில் பெரும்பாலான பள்ளி வேலைநாட்கள் பண்டிகை விடுமுறை மற்றும் மழை விடுமுறைகளால் பாதிக்கப்பட்டன. இதனால், அரையாண்டு தேர்வுக்குள் பாடங்களை நடத்தி முடிக்கவும், அதற்குள் மாணவர்களை தயார் படுத்த வேண்டிய கட்டாயத்திலும் ஆசிரியர்கள் உள்ளனர்.விடுமுறை நாட்களை ஈடுகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், சிறப்பு வகுப்புகளை நடத்துவதில், கல்வித்துறை தனிகவனம் செலுத்தியது. 

இதனால், காலாண்டு தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில், அதற்குள் பாடங்களை முழுமையாக நடத்தி முடிப்பதில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், பள்ளி வேலை நாட்களில் நடக்கும் பயிற்சிக்கு செல்வதால், பாடங்கள் நடத்துவது பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அலுவலக பணி மற்றும் பிற பணிகளுக்காக ஆசிரியர்கள் திருப்பூர் வரை சென்றுவர வேண்டி உள்ளது. இத்தகைய சிக்கல்களால், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணி தடைபடுவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "கடந்த மாதத்தில் விடுமுறை நாட்கள் அதிகரித்ததால், பாடங்களை, அரையாண்டு தேர்வுக்குள் நடத்தி முடிக்க குறுகிய அவகாசமே உள்ளது. 

அரையாண்டு தேர்வில் பாடம் முழுவதும் கேட்கப்படும் என்பதால், மாணவர்களுக்கு துவக்கத்தில் இருந்து புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. நடப்பு மாதத்தில் பள்ளி வேலைநாட்களில் நடக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை, அரசு குறைத்து கொண்டால், மாணவர்களை தயார்ப்படுத்த உதவியாக இருக்கும்" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement