Ad Code

Responsive Advertisement

சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு இலவச "லேப்-டாப்'களை விற்கும் மாணவர்கள்

இலவச "லேப்-டாப்' பெறும் மாணவர்களில் சிலர், சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு அவற்றை விற்று, ஏமாறுகின்றனர். இலவச பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள், லேப்-டாப் என 16 வகையான கல்வி நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியரின் கல்லூரி படிப்புக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 13,389 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 21.42 கோடி ரூபாய்.
சில மாணவ, மாணவியர் லேப்-டாப் பயன்படுத்த அக்கறை காட்டுவதில்லை. நண்பர்களுடன் பொழுதை கழிக்கவே விரும்புகின்றனர். அவ்வாறான மாணவர்கள், இலவசமாக கிடைத்த லேப்-டாப்பை, விலைக்கு விற்கின்றனர். 6,000 முதல் 8,000 ரூபாய் வரை, அந்த லேப்-டாப் விற்கப்படுகிறது.
கல்லூரி மாணவ, மாணவியர் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள சில ஆசிரியர்களும், இலவச லேப்-டாப்களை விலைக்கு வாங்கிக்கொள்வது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் சிலர், விற்பனை பிரதிநிதி போல் செயல்பட்டு, தங்கள் பகுதியில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரிடம் பேரம் பேசி, லேப்-டாப்களை குறிப்பிட்ட விலையில் வாங்குகின்றனர்.பெற்றோரில் சிலர், போதிய கல்வியறிவு பெறாத கூலி தொழிலாளர்களாக உள்ளனர். லேப்-டாப் பற்றி முழுமையாக அறியாததால், ஆடம்பரப் பொருளாக கருதுகின்றனர். குடும்ப வறுமை கருதி, லேப்-டாப்பை விற்குமாறு, பிள்ளைகளை வற்புறுத்துகின்றனர். குடும்பத்தேவை மற்றும் கடன் பிரச்னைக்காக சில மாணவ, மாணவியர் லேப்-டாப் விற்க, பெற்றோரும் காரணமாக உள்ளனர்.அதேநேரத்தில், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதோடு, கடமை முடிந்து விட்டதோடு, கல்வித்துறை அதிகாரிகள் நினைக்கின்றனர். அதை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா அல்லது விற்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
குமார் நகர் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரனிடம் கேட்டபோது, ""நடப்பாண்டில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப், அனைத்துவசதிகளையும் கொண்ட "லேட்டஸ்ட் மாடலாக' உள்ளது; மாணவர்கள், அதை பொக்கிஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். சில மாணவர்கள், அதன் அருமை தெரியாமல், பணத்துக்கு ஆசைப்பட்டு விற்று ஏமாறுகின்றனர். இதுதொடர்பாக, மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement