Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் தரத்தை மதிப்பிட காலாண்டுத் தேர்வு குறித்து ஆய்வு

காலாண்டுத் தேர்வு முடிவு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள் வழங்குதல், பாட ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. 


ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் பெறும் அடைவுத் திறன் குறித்து கண்காணித்து வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகளிலும் பள்ளிக் கல்வித்துறை கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் பொதுத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும், அதிக மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது. அதற்காக அனைத்து பாட  ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து முடிந்து, அதன் மதிப்பீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. காலாண்டுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆய்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, காலாண்டுத் தேர்வில் பின்தங்கிய மாணவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும். குறைவாக மதிப்பெண் பெற்றதற்கான காரணம் என்ன, அதை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் அறிக்கை தயாரித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் காலாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முடிவுகள் விரைவில் பள்ளிக் கல்வித்துறைக்கு அடுத்த வாரம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement