Ad Code

Responsive Advertisement

பள்ளி சிறுவர்கள் காதலிப்பது போன்ற சினிமாக்கள்: ஐகோர்ட் வேதனை

''தர்மம், நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மை, நீதி, நெறிகளை கற்பித்து நல்வழிப்படுத்தும் சினிமா எடுக்க வேண்டும்,'' என, மதுரை ஐகோர்ட் கிளை வலியுறுத்தி உள்ளது.

புகார்கள்:

மதுரை வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ''தீபாவளிக்கு, 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' படங்கள் வெளியாகின்றன. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போர் பற்றி நிலவும் உணர்வுகளை, மோசமாக சித்தரித்து உள்ளனர். இந்த படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:படங்களை பார்க்காமல் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் உள்ளதாக யூகித்து, செவி வழியாகக் கேட்டதைக் கொண்டு, கற்பனையாக மனு செய்துள்ளார். ஆதாரமற்ற புகார்களை ஏற்க முடியாது.சட்டம்- - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், மாநில அரசு சமாளித்துக் கொள்ளும். சமூகம், தேசிய பிரச்னைகளை முன்னிறுத்திய படங்களில். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., சிவாஜிகணேசன் நடித்துள்ளனர்.சமீபத்தில், எதிர்மறை கருத்துக்கள், பெண்களை கேலி செய்தல், மது அருந்துதல், பள்ளிச்சிறுவர்கள் காதலிப்பது போல் படமாக்குகின்றனர். சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ளோர், தங்கள் சமூக பொறுப்பை உணர வேண்டும். மக்களிடம், சினிமா எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் வேண்டாம் என, கோர்ட் கூறவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து படம் எடுத்து, ஒரு சிலர் எதிர்ப்பதால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். படம் வெளியாகும் சமயத்தில், அதை எதிர்ப்பது வழக்கமாகி விட்டது. தயாரிப்பாளர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மொழி, சமூகம், மதம், வட்டார அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவிப்பது, கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்பதாகும். தியேட்டர்களில், படத்தை பார்த்து ரசித்து மகிழ்வதோடு, மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் உணர்வுகளுக்கு தயாரிப்பாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். தணிக்கை வாரியம் அனுமதித்த சில படங்களில், மிருகத்தனமாக வன்முறை, ஆயுத கலாசாரம், நடுரோட்டில் கொலை, கொடூரம், ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, மனுதாரர் கூறுவது சரியே.

ஊழல்:

தணிக்கை வாரியத்தில் ஓர் உயரதிகாரி, ஊழலில் ஈடுபட்டதாகக் கூறுவதை அலட்சியப்படுத்த முடியாது. இதுபோன்ற பதவி வகிப்போர் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.பாலியல் பலாத்காரம், வன்முறை, பெண்கள் மீது தாக்குதல், இரட்டை அர்த்த வசனங்கள் அடங்கிய காட்சிகளை தவிர்க்க வேண்டும். சட்டவிரோத செயல்கள் வெற்றியடைவது போன்ற காட்சிகள், வசனங்கள், மது அருந்துதல், பீடி, சிகரெட் புகைத்தல், கவர்ச்சிகரமான காட்சிகள் கூடாது.குடும்ப மதிப்பீடு, தர்மம், நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மைக்கு முக்கியத்துவம் அளித்து சித்தரிக்க வேண்டும். நீதி நெறிகளை கற்பித்து, மக்களை நல்வழிப்படுத்தும் வகையில், பாடல்கள் அமைய, இக்கோர்ட் எதிர்பார்க்கிறது.தணிக்கை வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர், அரசியலுக்கு அப்பாற்பட்டு, நேர்மையாக செயல்படுவராக இருக்க வேண்டும். படங்களை உறுப்பினர்கள் பார்த்து சான்றளித்து உள்ளனர். மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் உத்தரவிட்டு உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement