Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவசக் கல்வி: நேத்ரோதயா நிறுவனர் கோரிக்கை

ஆதிதிராவிடர், பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் இலவசக் கல்வி அளிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று நேத்ரோதயா நிறுவனர் சி.கோவிந்தகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

"நேத்ரோதயா' பார்வையற்றோர் சிறப்புப் பள்ளியின் 12-ஆம் ஆண்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சி.கோவிந்தகிருஷ்ணன் பேசியது:

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், கல்வி பயிலும்போது அவர்களுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் "நேத்ரோதயா' பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பி.எட்., படிப்பு பயில்வோர், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பயில்வோருக்கு பாடத்திட்டங்கள் அடங்கிய குறுந்தகடுகள் வழங்கப்படுகின்றன.

முன்பு பிரெய்லி முறையில் புத்தகங்களை வாசித்தல், பிறர் வாசிக்கும்போது கேட்டல் ஆகியவற்றின் மூலம் கல்வி பயில்வதில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தன. இதனைப் போக்கும் வகையில், தற்போது பாடத்திட்டங்கள் அடங்கிய குறுந்தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் கல்வி கற்க முடியும்.

பார்வையிழப்புக்கான காரணம் குறித்து ஆரம்ப நிலையிலே கண்டறிந்து நிரந்தர பார்வையிழப்பு உறுதி செய்யப்பட்டால் காலத்தை விரையம் செய்யாமல் மறுவாழ்வுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கண்ணை, அப்படியே இன்னொருவருக்குப் பொருத்த முடியாது. கார்னியா எனும், கண்ணின் கருவிழியை மட்டுமே பொருத்த முடியும். எனவே, ஆண்டுதோறும் நடைபெறும் கண் தான விழிப்புணர்வுப் பிரசாரத்தை இனி வரும் ஆண்டுகளில், கருவிழி தான விழிப்புணர்வு என பிரசாரம் செய்ய உள்ளோம்.

ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் இலவசமாக கல்வி பயில அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், ரயில் பயண முன்பதிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு என இணையதள முன்பதிவு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 மதிப்பிலான விற்பனைப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

பார்வைத்திறன் குறைந்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி

பார்வைத்திறன் குறைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு "நேத்ரோதயா'வில் இலவசக் கல்வி, தங்குமிடம், உணவு ஆகியவை அளிக்கப்படுகின்றன. இதை கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்த விவரங்களை அறியவும், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பி.எட்., படிப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்கள் அடங்கிய குறுந்தகடுகளைப் பெறவும் 044-26533680, 26530712 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு இலவசமாகப் பெறலாம் என சி.கோவிந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement