பள்ளிகளில், சமஸ்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'அதற்கு பதில், அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பாரம்பரியம் அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்' என, ஆலோசனை தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர், ஆகஸ்ட், 7ம் தேதி முதல், 13ம் தேதி வரை, சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளதை அறிந்தேன்.அந்த கடிதத்தில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், கேந்திரிய வித்யாலயா, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதுடன், மாநில அரசுகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை, மாநில, மாவட்ட அளவில் நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.