Ad Code

Responsive Advertisement

ஆராய்ச்சி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்: அரசின் தூக்கம் கலைவது எப்போது?

பி.எச்.டி. படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள், மாநில அரசின் உதவித் தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர்.  
தமிழக அரசு 
இப்பிரச்னையில் உடனடியாக தலையிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
உதவித் தொகை
"தமிழக அரசு கல்லூரிகளில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். இத்திட்டத்தை, மாநில அரசின் நிதியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த உதவித்தொகை பெற முதுநிலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முழு நேர ஆராய்ச்சி மாணவர்களே உதவித்தொகை பெற தகுதியானவர். மற்ற திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்றவர்கள் இத்திட்டத்தில் உதவித் தொகை பெற முடியாது. முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். 
அதன் படி, 2013-14ல் ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் வீதம் 700 மாணவர்களுக்கு 3.50 கோடி ரூபாய் வழங்க கடந்த ஜனவரியில் அரசாணை வெளியானது. அதில், எந்தெந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 300 மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற 400 மாணவர்களுக்கு உதவித்தொகை என்ன ஆனது என, ஆதி திராவிடர் துறை இயக்குனர் அலுவலகத்தில் கேட்ட போதும் முறையான பதில் வரவில்லை என, கூறப்படுகிறது.
மதம் மாறியவர்களுக்கு...
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 430 பேரிடம் இருந்து உதவித்தொகை கேட்டு விண்ணப்பங்கள் வந்தன. அதில், 300 பேருக்கு வழங்கி விட்டோம். அரசாணையில் சில விஷயங்கள் தெளிவாக இல்லை. குறிப்பாக கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை. மேலும், யு.ஜி.சி.யின் விதிமுறைப்படி மூன்று, நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் உதவித் தொகை பெற தகுதியானவரா என, தெரியவில்லை. அதனால், 400 பேரின் உதவித் தொகை பரிசீலிக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர். ஆனால், மாணவர்கள் இதை முற்றிலும் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: யு.ஜி.சி.,யின் விதிமுறைப்படி, மற்ற திட்டங்களில் உதவித் தொகை பெற மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தகுதியானவர்கள். அதுமட்டுமின்றி, இது முழுக்க மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம்.
நலத்திட்டங்கள்
"முதல் ஆண்டு முதல், நான்காம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என, மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் பொருந்தும். இதுவரை, வந்த அனைத்து திட்டங்களிலும் இந்த நடைமுறை உள்ளது. அரசாணையில், இந்த விதி குறித்து குறிப்பிடவில்லை எனில் அரசு செயலர், அமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதற்கு, இரண்டு நாள் போதும். நான்கு மாதம் வரை முடிவெடுக்காமல் உள்ளனர். 
அடுத்த மாதத்தோடு கல்வியாண்டு முடிகிறது. ஆனால், இதுவரை எங்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. பல மாணவர்களால் புத்தகம் கூட வாங்க முடியவில்லை. கலைத்துறை மாணவர்கள் கூட புத்தகங்களை கடன் வாங்கி சமாளித்துக் கொள்வர். ஆனால், அறிவியல் துறை மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. எனவே, அரசு இப்பிரச்னையில் உடனடி தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Ad Code

Responsive Advertisement