Ad Code

Responsive Advertisement

இட ஒதுக்கீட்டில் குழந்தையை சேர்க்க 4 ஆவணம்! பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுரை

 தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்ட இட ஒதுக் கீட்டில் மாணவர்களை சேர்க்க, விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில், 2014-15ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். அதற்கான விண்ணப்பம், தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகிறது; 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.ஒரு பகுதியில், குறிப்பிட்ட தூரத்துக்குள் அரசு பள்ளி இல்லாத பட்சத்தில், அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்பது பாதிக்கிறது. சொற்ப எண்ணிக்கையில் உள்ள அக்குழந்தைகளுக்காக, தனியாக ஒரு அரசு பள்ளியை உருவாக்காமல், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அக்குழந்தைகளை சேர்க்கவும், அவர்களுக்கான கல்வி செலவை ஏற்கும் வகையிலும், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒரு குழந்தை கல்வி கற்பது எந்த காரணத்தாலும் தடைபடக்கூடாது என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம்.




இதன் அடிப்படையில், ஏழை குழந்தைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தனியார் பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்து ஒரு கி.மீ.,க்குள் வசிப்பதற்கான இருப்பிட சான்று, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் என்பதற்கான வருமான சான்று, குழந்தையின் பிறந்த நாள் சான்று மற்றும் ஜாதி சான்று ஆகியவை கட்டாயம் தர வேண்டும். இவற்றை முறையாக சமர்பித்தால் மட்டுமே, விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Ad Code

Responsive Advertisement