Ad Code

Responsive Advertisement

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 13ம் தேதி 2ம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடிகளில்பணிபுரியும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வரும் 13ம் தேதி நடக்கிறது. இதில் 15 ஆயிரம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்திலுள்ள 3,272 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் 15 ஆயிரத்து 967 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. முதற்கட்டமாக கடந்த 3ம் தேதி, மாவட்ட முழுவதும் மொத்தம் 11 பள்ளிகள் மற்றும் 5 கல்லூரிகளில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேற்றுமுன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் 2ம் கட்ட பயிற்சி வரும் 13ம் தேதி மாவட்டம் முழுவதும் நடக்கிறது. இந்த பயிற்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு தயார் செய்து வைக்க வேண்டும், வாக்காளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும்போதே அவர்களின் பணிகள், அதற்குரிய படிவங்கள் பூர்த்தி செய்வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement