Ad Code

Responsive Advertisement

இயற்கையைப் பாதுகாக்கும் 'விதை விநாயகர்!'

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.
புதிய வடிவங்களில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் இப்போது கடைவீதிகளில் கண்ணைப்பறிக்க துவக்கிவிட்டன. இனி, 'ஸ்பீக்கர்' சத்தம் முழங்க, மூன்று நாட்களுக்கு வீதியெங்கும் ஒரே ஆரவாரம்தான்.

அதே சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று அருகிலுள்ள குளம், குட்டைகளில் கரைத்துவிட்டு அடுத்த வேலையை நோக்கி அனைவரும் நகரத்துவங்கி விடுவர். ஆனால், அதன்பிறகு ஏற்படும் பாதிப்பைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை.

கவர்ச்சிக்காக, பல கெமிக்கல்கள் சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் நீர் மாசைத் தவிர்க்கும் வகையில், 'கிரீன் கணபதி' எனும் விதை விநாயகர் சிலையை தயாரித்து அசத்தியுள்ளனர் கோவையை சேர்ந்த, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தினர்.

சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத, அதேசமயம் வருங்கால தலைமுறையை மனதில் கொண்டு, விதைகளை அவர்கள் கையால் விதைக்கும் வகையில், இயற்கை விதைகளை இணைத்து வடிவமைத்த விதம் அட்டகாசம்.தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றியபடியே இந்த தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் சுவரஜித் நம்மிடம் பகிர்ந்தவை...

அனைத்து விதமான சமூகத்தாக்கத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காகவே, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து துவங்கினோம். இதன்மூலம், கல்வி, உணவு, மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.

தற்போது, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, ரசாயன சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் தீமைகள் எடுத்துக்கூறும் விதமாக, பசுமை விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளோம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக்
கொண்டு இந்த விநாயகர் சிலைகளை வடிவமைக்கிறோம்.

கூடவே, இயற்கை விதைகளையும் சிலைகளில் நடுவில் இணைந்து தயாரித்து வருகிறோம். இதில், இரண்டு வகைகள் உள்ளன. அபார்ட்மென்ட்டில் வாழும் நகர வாசிகளுக்கு ஏற்ப, சிலையில், தக்காளி, துளசி, வெண்டை, பச்சைமிளகாய், முருங்கை, பப்பாளி உள்ளிட்ட விதைகளை இணைத்துள்ளோம்.

இதுபோன்று இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் தயாரிக்கப்படும் சிலையைக் கரைப்பதற்கு நீர் நிலைகளைத் தேடி அலைந்து சிரமப்படத் தேவையில்லை. சதுர்த்தி முடிந்தவுடன் வீட்டின் வெளியே வாலி அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வைத்தால் மட்டும் போதும்.அதில் இருக்கும் களி மண் கரைந்து விடும். பின் அதனைச் சூரிய வெளிச்சத்தில் வைத்தால் போதும் ஒரு வாரத்திலேயே அதனுள் இருக்கும் விதை முளைக்கத் தொடங்கிவிடும். வீட்டு தோட்டத்திலும் கரைக்கலாம்.

ஆறு, குளம், குட்டைகளில் கரைக்க விரும்புவோருக்காக பிரத்யேக சிலைகள் உள்ளன. இதில், விதைகள், மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன்பெறும் வகையில், மக்காச்சோளம், கோதுமை, ரவை, அவல் உள்ளிட்டவைகளை இணைத்துள்ளோம்.

பளீச்சிடும் வண்ணங்களில் இந்த விநாயகர் சிலைகள் இருக்காது. இயற்கை களிமண் நிறத்திலே கலைநுட்பத்துடன் வடிவமைத்துள்ள சிலைகள், 3 இன்ச் முதல், 2 அடி வரையில் உள்ளன. குறைந்தது, 24 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரையில் விற்பனைக்கு கிடைக்கும்.பாரம்பரிய கலாசாரத்தை பாதிக்காத, அதேசமயம் இயற்கையை தீங்கு விளைவிக்காத இந்த விதை விநாயகர் சிலைகளுக்கு பலதரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

விரும்புவோர் 96556 67775 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வாழ்த்துக்கள் .

தமிழ் மண்ணே வணக்கம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement