Ad Code

Responsive Advertisement

மார்பகப் புற்றுநோய் 76,000 பெண்களுக்கு ஆபத்து!

உலகில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு  மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் இரண்டாவதாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. 50 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. எந்த வயது பெண்களுக்கும் இது வரலாம். வயது அதிகரிக்கும்போது நோய் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும். பொதுவாக மார்பகப் புற்றுநோய் உருவாவதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் உள்ளிட்ட ஹார்மோன்கள் காரணமாக உள்ளது. இதைத் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், இந்தப் புற்றுநோய் செல்கள் வளர்வதை ‘டமோக்சி பென்’ உள்ளிட்ட மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.


இந்த நிலையில், இந்தியாவில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாவிட்டால் 2020ஆம் ஆண்டு 76,000 பெண்கள் புற்றுநோயால் இறக்கலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2012இல், இந்தியாவில் 70,218 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறந்துள்ளனர் என ஜர்னல் ஆஃப் பிசினஸ் ரிசர்ச் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மார்பகப் புற்றுநோயால் இறக்கும் வயது விகிதம் 50இல் இருந்து 30 ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து துபாய் வொல்லோங்கொங் பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் விஜய் பெரேரா, “மார்பகப் புற்றுநோய் பிரச்னையின் அளவு மிகப் பெரியது. இது தேசிய, மாநில மற்றும் சமூக மட்டங்களில் சிக்கலான சவால்களைக்கொண்டுள்ளது. மாநில அளவிலான சுகாதார பராமரிப்பு தரம் மற்றும் விழிப்பு உணர்வை வழங்குவதற்கான வழிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பெண்களிடையே சுய பரிசோதனை மற்றும் கலாசார தடைகள் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததால், அவர்களுக்கு மிகவும் தாமதமாகவே மருத்துவசிகிச்சை கிடைக்கிறது. பெண்கள் சுகாதார சேவைகளை அணுகுவதில்லை. ஆண் மருத்துவரிடம் பேச தயக்கம் காட்டுகின்றனர். குடும்பத்தின் கடமைகளால் தங்கள் உடல்நலத்தைப் புறக்கணித்து விடுகின்றனர். குடும்ப உறுப்பினர்களை அதிகம் சார்ந்து இருக்கின்றனர். இந்த அனைத்துக் காரணங்களாலும் நோயைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூடித் பிளெட்சர் பிரவுன், “மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப நோயறிதலின் முக்கியத்துவம் குறித்து இந்திய ஆண்களுக்கு அறிவூட்டுவதன்மூலம், தொற்றுநோயாக நோய் மாறுவதை நிறுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா இன்னும் ஓர் ஆணாதிக்க சமூகமாகவே உள்ளது. இப்போது பெண்கள் பொறுப்புள்ள வேலைகள் மற்றும் தங்கள் குடும்பங்களுக்காகச் சம்பாதித்தாலும் ஆண்களே குடும்பத்தைக் காப்பதாகக் கருதப்படுகின்றனர்.

கல்வியறிவுடைய வேலைக்குச் செல்லும் பெண்கள்கூட தங்கள் உடல்களின் ஏற்படும் விஷயங்கள் குறித்து தங்கள் கணவர், தந்தை அல்லது சகோதரர்களுடன் விவாதிப்பதில்லை. எனவே, பெண்கள் ஆண்களிடம் நேரடியாக ஆரோக்கியமான செய்திகளைத் தருவது அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.

விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெரிய நகரமயமாக்கல் ஆகியவை மார்பகப் புற்றுநோய் விகிதங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது. பெண்கள் வயதைக் கடந்து குழந்தைகளை பெற்றுக்கொள்வதும், தாய்ப்பால் அளிக்காமல் இருப்பதும் நோய் வளரும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நகர்ப்புற இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் உடல் எடையை அதிகரிக்கும் மேற்கத்திய உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இது ஆபத்தை அதிகரிக்கிறது. ஆரம்ப சுகாதார செவிலியர்கள் மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளின் விழிப்பு உணர்வை அதிகரிப்பதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். கூடுதலாக பள்ளிகளும் ஊடகங்களும் இளம் பெண்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்துகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement