மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்துள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
பின்னணி என்ன?
மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தமாணவரான தர்னீஷ்குமார், சென்னையைச் சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.அதில், ''சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்தம் உள்ள 2,500 இடங்களில் 319 இடங்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறிவிட்டு தற்போது மாநில வழிக்கல்வி, மத்திய வழிக்கல்வி என மாணவர்களை பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. மருத்துவ கவுன்சில் விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்.
ஓபிசி பிரிவினர் என்ற அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, பாடத் திட்டத்தின் அடிப்படையில் 85 சதவீத உள் இடஒதுக்கீட்டை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்குவது என்பது சட்ட விரோதமானது. இந்த அரசாணையை செயல்படுத்தும் அதிகாரமும் தமிழக அரசுக்கு கிடையாது. எனவே கடந்த ஜூன் 22-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.
இந்நிலையில் ஜூலை 14-ம் தேதியன்று வழக்கை விசாரித்த நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு, தமிழக அரசின் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டார்.இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) உயர்நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:''மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% உள் இடஒதுக்கீடு செய்தது அரசின் கொள்கை முடிவு.
தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு சிபிஎஸ்இ வழியாகப் படித்தவர்களுக்கு மட்டுமே எளிதாக இருந்தது.மாநில வழிப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தனர். சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங்களில் கிடையாது.குறிப்பாக தமிழக அரசு நீட் தேர்வை எதிர்க்கும் சூழ்நிலையில், சிபிஎஸ்இ வழியாகக் கற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் அதிகமாக நுழைய இம்முறை வழிசெய்யும்.சாதிய ஒதுக்கீடுகள் தவிர்த்து தேசிய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என ஏராளமான ஒதுக்கீடுகள் பின்பற்றப்படுகின்றன.
இத்துடன் இதுவும் சேர்ந்தால் மாநில வழிப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள்.அரசாணையையும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றியே பிறப்பித்துள்ளோம். அதனால் உள் இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை