Ad Code

Responsive Advertisement

சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 330 பேர் கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மாதம் ரூ.4000 என தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது. 

இவர்கள், கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கால முறை ஊதியம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு தரப்பில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு அறப்போராட்டம் நடத்தினர். நேற்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்த கணினி பயிற்றுநர்கள் அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு போவதாக பதிவு செய்துவிட்டு உள்ளே வந்தனர். பின்னர் 11.30 மணி அளவில் இரண்டாவது நுழைவாயில் அடுத்துள்ள அருங்காட்சியகத்தின் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை கூட்ட நிகழ்ச்சி தொடங்கி உள்ளே விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது கணினி பயிற்றுநர்கள் அந்த வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பதற்றம் அடைந்தனர். அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கூடுதல் ஆணையர் கேள்வி : தர்ணாவில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்களை போலீசார் தூக்கி தலைமைச் செயலகத்துக்கு வெளியில் கொண்டு சென்றனர். அங்கும் அவர்கள் தர்ணாவில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.  

இந்த பரபரப்பு சம்பவத்தால் அங்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்த கூடுதல் ஆணையர் ஜெயராமன், போலீசாரை கடுமையாக எச்சரித்தார். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் எப்படி உள்ளே வந்தனர். அவர்களை எப்படி அனுமதித்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். இதனால் போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement