Ad Code

Responsive Advertisement

போட்டி உலகில் பலியாகும் மாணவர்கள்... கல்வி மாற்றங்கள் பலன் தருமா????

மதிப்பெண்களைத் தகுதியாக வைத்து மாணவனை மதிப்பிடும் முறைக்கு மூட்டை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த
கல்வியாளர்களுக்கு இந்த வருடம்தான் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.
கவனம் பெற்ற அறிவிப்புகள்

சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகக் கல்வித்துறை, இன்னும் சில சீர்த்திருத்தங்களைக் கண்டிருக்கிறது. அரசியல் ஸ்தரமற்ற சூழல் நிலவும் நிலையில் துணிச்சலாக கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்திருப்பது இன்னொருபுறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் என்ற பிரமாண்டப் பட்டியல் செய்திக்கு அருகில் ஒரு மூலையில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை என்ற சிறிய செய்தியை இனி காணத்தேவையில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இனி முதலிடம், இரண்டாம் இடம் என்று மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை இருக்காது என்றும், கிரேடு சிஸ்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லி அதன்படி தேர்வு முடிவுகள் வெளியாயின.

இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பிலும் கிரேடு சிஸ்டம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, 11 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தாலும் 12 ஆம் வகுப்புக்குப் போகலாம். தோல்வியுற்ற பாடங்களை 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே எழுதலாம் என்பதும் மாணவர்களிடம் கவனம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் என்ற அறிவிப்பும் கல்வியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வரவேற்கத்தக்க ஆலோசனைகள்
கடந்த சில ஆண்டுகளாக கல்வித் துறையில் ஒரு தலைப்பட்சமான முடிவுகளே எடுக்கப்பட்டு வந்தன. இதனால், கல்வித்துறை மீது கல்வியாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட உடன், கல்வியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பின்னர்தான் இந்த நல் அறிவிப்புகள் வரிசை கட்டி வெளியாகி இருக்கின்றன.

கல்வித்துறையின் சீர்த்திருத்தங்கள் திருப்தி அளிக்கிறதா என கல்வியாளர் வசந்தி தேவியிடம் கேட்டோம்.

"சில காலமாக அக்கறையற்று இருந்த கல்வித் துறை இன்றைக்கு மிகவும் துரிதமாக இயங்கத் தொடங்கி இருக்கிறது. துறைச் செயலாளர் உதயச்சந்திரனுடைய தீவிரமான முயற்சி, ஈடுபாடு, மாற்றங்கள் அவசியம் என்ற எண்ணம் ஆகியற்றால் இது சாத்தியம் ஆகி இருக்கிறது. 

என்னைப் போன்ற கல்வியாளர்களிடம் அவர் ஆலோசனை செய்தார். ஆசிரியர்களையும் ஆலோசித்த பின்னர் முடிவு செய்யுங்கள் என்று சொன்னேன். அதன்படி எல்லா தரப்பிலும் ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்திருக்கிறார். எல்லா கருத்துகளையும் கேட்டார். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை உதயச்சந்திரனுக்கு இல்லை. மாற்றங்களை அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது.
பலியாகும் குழந்தைகள்
நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. சி.பி.எஸ்.இ-க்கு இணையாக மாநில பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை இருந்தது. என்னைப் பொறுத்தவரையில், இந்த சீர்திருத்தங்கள் போதாது. கல்விதான் சமூகத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் அடித்தளமாகவும் இருக்கிறது.
கல்வி அமைப்பில் ஏற்றதாழ்வுகளை உருவாக்கி மேலே இருப்பவர்கள் மட்டுமே பலன் பெறுவதாக இதுவரை இருந்தது. இப்போது, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. அரசுப் பள்ளிகள் மூலம் மட்டும்தான் சமுதாயம் வளரமுடியும். தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளைகள் நடக்கிறது. கல்வியை அவர்கள் வியாபாரம் ஆக்கி விட்டார்கள். பல்வேறு விதிமீறல்கள், குழந்தைகள் உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கு மன உளைச்சலைத் தருகின்றனர். மனிதனை மனிதன் விழுங்குகின்ற போட்டி உலகத்தில் குழந்தைகள் பலியாக்கப்படுகின்றனர்.
எதிர்ப்புக்குப் பணியக்கூடாது
ஒன்றாம் வகுப்பில் இருந்து பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் போல மாற்றம் செய்யப்படும் என்று சொல்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், மாநில பாடத்திட்டமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதே போல தரத்தை உயர்த்துவது என்பது, 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்புப் பாடத்தை எடுப்பது என்று அர்த்தம் அல்ல. அந்தந்த வகுப்புக் குழுந்தைகளுக்கு அந்தந்த வகுப்புப் பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் தரமான கல்வி.
கல்வித்துறையில் சீர்த்திருத்தங்கள் என இன்னும் ஆழமான முயற்சிகளை மேற்கொண்டால், தனியார் பள்ளிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வரக்கூடும். அதையெல்லாம் மீறி தமிழக அரசு தைரியமாக மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்" என்றார்.
போட்டித் தேர்வுக்கு உதவும் மாற்றங்கள்
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் இயக்க ஆலோசகர் ரா.முனியனிடம் பேசினோம்.
"மாற்றங்களின் மூலம் மாணவர்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வது வரவேற்கத்தக்கது. அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. பாடத்திட்டங்களை வலுவாக்க குறிப்பு உதவிப் புத்தகங்கள் படித்தால் போதும். இதுவரையிலும், இந்தக் கேள்விக்கு, இந்த விடைதான் என்று டிசைன் செய்து மாணவர்களுக்குக் கொடுத்தோம். இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், போட்டித்தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எளிதாக இருக்கும்.
இந்த மாற்றங்களால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. புதிய மாற்றங்களை அமல்படுத்தும்போது புரிதலை ஏற்படுத்தி விட்டால் பிரச்னைகள் தீர்ந்து விடும்.
15 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 11 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி வருகிறார்கள். தனியார் பள்ளிகளில்தான் நடத்த மாட்டார்கள். ஆனால், 12 ஆம் வகுப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் 11 ஆம் வகுப்புக்குக் கொடுக்கப்படுவது இல்லை என்பது உண்மைதான். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாடங்களை மாற்றாமல் இருப்பது நல்லதல்ல. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டங்களை மாற்றவேண்டும்" என்றார்.
ஆசிரியர்கள் வருகை முக்கியம்
தமிழ்நாடு மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர், கே.ஆர்.நந்தக்குமாரிடம் பேசினோம்.
"கல்வித்துறையில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறையிடம் நாங்கள் கோரிக்கைகள் வைத்தோம். அதன்படிதான் இப்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பாடங்கள் எடுப்பதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண்களைப் போட்டு விடுகின்றனர். தேர்வுகளின்போது 'அட்ஜஸ்ட்' செய்து மதிப்பெண்கள் போடுகின்றனர்.
மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும், வராவிட்டாலும் 10 மார்க் போடுகின்றனர். செய்முறைத் தேர்வுக்கு 20 மார்க் போடுகின்றனர். கூடுதலாக 10 மார்க் எடுத்தால் அந்த மாணவன் தேர்ச்சி பெற்று விடுகிறான். 3 முறை வரிசையாகப் பொதுத்தேர்வு நடத்துவது என்பது ஒரு மன அழுத்தத்தைத் தரும் என்று சொல்ல முடியாது. 600 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சில தனியார் பள்ளிகள் அதிக மாணவர்களைச் சேர்த்து கொள்ளையடிக்கின்றனர். 12 ஆம் வகுப்பில் 4 செக்ஷனுக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், சில பள்ளிகளில் 40 செக்‌ஷன்கள் வைத்திருக்கின்றனர். எங்கள் பள்ளியில் ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் என்று விளம்பரமே செய்கின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வருகைப்பதிவேடுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் வருகையை பதிவு செய்வதற்கும் இந்த முறையைக் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் படிப்பது, எழுதுவது, பேசுவதை உறுதி செய்யவேண்டும். வாழ்க்கை கல்வி, நீதிபோதனை போன்ற பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். நூலகம் அமைக்க வேண்டும். விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement