Ad Code

Responsive Advertisement

வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு


மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது மத்திய அரசின் மனித வளத்துறை. அது மட்டுமில்லை... கலை அறிவியல் படிப்பு உள்பட பிற படிப்புகளுக்கும், தொழில்சார் வேலை வாய்ப்புக்கும் தேசிய அளவில் ஒரே தேர்வைக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. முதல்கட்டமாக, இந்தத் தேர்வுகளை எல்லாம் நடத்துவதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்க மத்திய அமைச்சரவையின் அனுமதியைப் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது மனித வளத்துறை.
தற்போது இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஐ.ஐ.டியில் சேர்வதற்கான `ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்', மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, மத்திய அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் ஆசிரியர் தகுதித்தேர்வு போன்றவற்றை நடத்துகிறது.

இந்தத் தேர்வுகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதி வருகிறார்கள்.
இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சி.பி.எஸ்.இ நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் 27 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்தத் தேர்வுக்கு பின்னர், தரப் பட்டியல் வெளியிடுவது, தேர்வில் மாற்றங்களைக் கொண்டு வருவது போன்ற பணிகளையும் செய்து வருகிறது.
சி.பி.எஸ்.இ அமைப்பு பள்ளி பொதுத்தேர்வுகளைத் தவிர, இதர நுழைவுத் தேர்வுகளை நடத்துவதைக் கூடுதல் பாரமாகக் கருதுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு புதிய தேசிய தேர்வு வாரியத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிளார் மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
இந்தத் தேர்வு வாரியம் பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி சார்ந்த சேர்க்கைகள், தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கான தகுதி தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளையும் நடத்தும். சி.பி.எஸ்.இ அமைப்பு, மத்திய அரசின் அனுமதியோடு நடத்தப்படும் பள்ளிகளின் கல்வித் தரம், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளை மட்டுமே கவனிக்கும்.
மனிதவளத்துறையின் உயர் பொறுப்பில் உள்ள அலுவலர் இதுகுறித்து பேசிய போது ''புதிதாக அமைய உள்ள மத்திய தேர்வு வாரியம் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்ப முறையில் இணையத்தின் மூலம் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் எழுதுவதற்கான முறையை உருவாக்கும். இனிவரும் காலங்களில் நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் தனியார் அமைப்புகளின் தேவை, இருக்காது. ஏற்கெனவே சி.பி.எஸ்.இ அமைப்புக்கு அனுபவம் இருப்பதால் இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே தேர்வு வாரியத்தைக் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது'' என்றார்.
ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு என்று தனியே சேர்க்கை விதிமுறைகளையும், தேர்வுகளையும் நடத்தி வரும் நிலையில், இந்த புதியத் தேர்வுவாரியத்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் எந்தளவுக்கு வாய்ப்பைப் பெற முடியும் என்று தெரியவில்லை. தற்போது இழுத்து பணத்தை கறக்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கும், இதர படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு என்று வரும்போது மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தாமல் நுழைவுத்தேர்வில் மட்டுமே முழு கவனம் செலுத்துவார்கள். இனி வரும் காலங்களில் நுழைவுத் தேர்வு மையங்களே மாணவர்களைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக மாறி விடும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் இல்லை என்பதால் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே வாய்ப்புகள் கிடைக்கும். தமிழக அரசு இந்த விஷயத்தில் விழிப்போடு இருந்து மாணவர்களின் நலனை விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement