Ad Code

Responsive Advertisement

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.


மேலும் அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்த பால்வளத் துறை அமைச்சர் பொறுப்பு கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பால் வளம்-பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஆவடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள கே.பாண்டியராஜன், பள்ளிக் கல்வி-விளையாட்டு-இளைஞர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

இலாகாக்கள் மாற்றம்:

அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஊரக தொழில்கள் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு, பால் வளம்-பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், பள்ளிக் கல்வி-விளையாட்டு-இளைஞர் நலத் துறை அமைச்சராக இருந்த பி.பென்ஜமினுக்கு ஊரகத் தொழில்கள் துறை பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா:

புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பாண்டியராஜன், ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) மாலை 4.35 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யா செய்து வைக்கிறார்.

பொறியியல் பட்டதாரி:

 புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ள கே.பாண்டியராஜனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டி ஆகும். 1959- ஆம் ஆண்டு ஏப்ரல் 26- இல் பிறந்தார். பொறியியல் பட்டதாரியான அவர், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார். மனிதவள மேம்பாட்டு நிபுணராக இருக்கும் அவர், கடந்த 2011- 16 ஆம் ஆண்டில் தேமுதிக சார்பில் விருதுநகர் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பின், அதிமுகவில் இணைந்த அவர் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல் முறையாக மாற்றம்:

இரண்டாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்த நிலையில், இப்போது முதல் முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement