Ad Code

Responsive Advertisement

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:
பள்ளி வளாக தூய்மை, காற்றோட்டத்துடன் சுத்தமான வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட கரும்பலகை இருக்க வேண்டும். வகுப்பறை மின் விசிறி, மின்விளக்குகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும். பள்ளி மேற்கூரை தூய்மையாக இருக்க வேண்டும்.குடிநீர் தொட்டியை, பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். குழாய்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறை பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும். இதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது பொது நிதியை பயன்படுத்தலாம்.மாணவர் பதிவேடு, முழுமையான விவரங்களுடன் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் பதிவேடு, ஊழியர்கள் பதிவேடு சரியாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான கால அட்டவணை,எழுதுபொருட்கள், மாணவர்களுக்கான இலவச புத்தங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; விழிப்புணர்வு ஊர்வலம், துண்டுபிரசுரம் வினியோகிக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று, அரசு பள்ளியின் தேர்ச்சி, சிறப்பம்சங்களை தெரிவிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளில், அனைத்து குழந்தைகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும்; முதல் நாளிலேயே, கற்பித்தல் பணியை துவக்க வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி துவங்குவதற்கு, 30 நிமிடம் முன்னதாக வந்து, பள்ளி சூழலை கண்காணிக்க வேண்டும்.மாணவர் மத்தியில், நற்பண்புகளை விதைக்கும் வகையில், நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்.

நல்ல கதைகள், கருத்துகளை கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புதிறன், கையெழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் நூலக வாசிப்பு ஆர்வத்தை தூண்டுவது முக்கியம். தினசரி நாளிதழ்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களை, மாலை நேரங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும், வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத நிலை கூடாது; விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, மாற்று ஆசிரியர்கள் வகுப்புக்குச் சென்று கற்பிக்க வேண்டும். பணி நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல, மாணவர்களை அனு மதிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத நேரத்தில், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று, பதிவேட்டில் பதிவு செய்த பின்பே செல்ல வேண்டும். ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement