Ad Code

Responsive Advertisement

'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.


தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி முதல், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும், மே, 1ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.இதை தொடர்ந்து, 'ஜூன், 1ல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் திறக்கப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், ஏப்ரலில் அறிவித்தார். 


தற்போது, கோடை விடுமுறை முடியும் நிலையில் உள்ளது. அதேநேரம், கோடை கால வெப்பநிலைவழக்கத்தை விட அதிகரித் துள்ளது.'இந்த அதிக வெப்பநிலை, இன்னும், மூன்று நாட்கள் வரை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், வெயில் தாக்கம் முடிந்த பின், பள்ளிகளை திறக்க,பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். 'ஜூன், 1க்கு பதில், 8ல் திறக்கலாம்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், மாணவர் நலச் சங்கத்தினர், அரசுக்கு பல மனுக்களை அனுப்பி உள்ளனர். எனவே, கோடை விடுமுறையை, அரசு ஒரு வாரம் நீட்டிக்கவாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.


இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையின் புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், நேற்று முன்தினம், கல்வித்துறை இயக்கக வளாகத்தில், முதல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.பள்ளி கல்வி செயலர் சபீதா, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர், இதுகுறித்து தீவிர ஆய்வு செய்து, பள்ளிகளை, ஜூன், 1ம் தேதியே திறக்க முடிவு செய்தனர். இதற்கு, அமைச்சர் பெஞ்சமினும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, 'திட்டமிட்டபடி, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



இந்த அறிவிப்பின் மூலம்,ஆசிரியர் சங்கத்தினர், பெற்றோர், மாணவர்நலச் சங்கத்தினர் ஆகியோரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. வெயில் கொளுத்தினாலும், பள்ளிகளை திறந்து, மாணவர்களுக்கான முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வகுப்புகளை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளே, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.



தனியார் பள்ளிகள் 'எஸ்கேப்':

'அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஜூன், 1ல் திறக் கப்படும்' என, பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்தாலும், பல தனியார் பள்ளிகள், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, விடுமுறையைநீட்டித்து உள்ளன. வெயில் தாக்கம் காரணமாக, பல மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன்பள்ளிகள், ஜூன், 6ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளன.



அதேபோல, தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகள், ஜூன், 8ல் திறக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பை பெற்றோருக்கு, 'எஸ்.எம்.எஸ்., இ - மெயில்'மூலம், தனியார் பள்ளிகள் அனுப்பி உள்ளன. 'புதுச்சேரி மாநிலத்தில், ஜூன், 1ல் திறக்க இருந்த பள்ளிகள், 6ம் தேதி திறக்கப்படும்' என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement