Ad Code

Responsive Advertisement

தொடர் கனமழை எதிரொலி; பள்ளிகள் தொடர் விடுமுறையால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாகஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அரையாண்டு தேர்வுகள்

பொதுவாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் மாதம் 2 மற்றும் 3-வது வாரங்களில் நடத்திவிட்டு 4-வது வாரம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர் கனமழை பெய்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளில்மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மழை வெள்ளம் காரணமாக கடந்த 12-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களும் மழை வெள்ளத்தில் சேதமடைந்தன. இதனால் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பெரும்பாலான பள்ளி மைதானங்களில் மழை வெள்ளம் தேங்கி கிடப்பதால் வகுப்பறைகளும், கழிவறைகளும் சேதமடைந்தன.இந்தநிலையில் ஒரு சில பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களை குறைத்து விடுமுறை நாட்களை சரி செய்யவும் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறியதாவது:-

பள்ளி நிர்வாகங்கள் 

கனமழை தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைத்து அந்த நாட்களில் பள்ளிகளை நடத்த சில பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளனர்.தவிர்க்க முடியாத காரணங்களால் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் 5-ம் வகுப்புக்கு கீழே உள்ள வகுப்புகளுக்கு வேலை நாட்களை ஈடுகட்ட கூடுதலான நாட்கள் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.

சில பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரையாண்டு விடுமுறையில் வெளியூர் செல்லும் திட்டங்களை தீட்ட வேண்டாம். விடுமுறை நாட்களை ஈடுகட்டுவதற்காக அந்த நாட்களில் நாங்கள் பள்ளிகளை நடத்த உள்ளோம் என்று கூறுகின்றனர்.ஒரு சில பள்ளிகள் பெற்றோர்களுக்கு போன் செய்து கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் மற்ற நாட்களில் வகுப்புகள் நடத்தப்படும் என்கின்றனர்.

விடுமுறையை குறைக்க திட்டம் 

விடுமுறை நாட்களை குறைப்பதை விட, தினமும் கூடுதலாக ஒரு மணிநேரம் வகுப்புகளை நடத்தி விடுமுறை நாட்களை அதில் கழிக்கலாம். 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்கவிருப்பதால் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர்கள் அரையாண்டு விடுமுறை நாட்களை குறைக்காமல், முழு ஆண்டு தேர்வு விடுமுறையை குறைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.இவ்வாறு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு?

வடகிழக்கு பருவ மழையால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்களை முறையாக வழங்கி அவற்றை கற்று தருவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் அரையாண்டு தேர்வை டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களை சேர்த்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அளித்துவிட்டு சனிக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் பள்ளிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.இருந்தாலும் மழை நின்றால் தான் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முறையாக அறிவிக்க முடியும். அதுவரை எதுவும் கூற இயலாது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement