Ad Code

Responsive Advertisement

தகுதி அடிப்படையில் தான் வாய்ப்புகள்: உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து

உயர்கல்வி துறையில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள்
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

இட ஒதுக்கீடு ஆதிக்கம்
கடந்த 68 ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு முறையில் எந்த வகையான மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதியின் மீது இட ஒதுக்கீடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது உயர்கல்வியின் தரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே தேசத்தின் நலனை கருத்தில் கொண்டும், உயர் கல்வித்துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் இட ஒதுக்கீடு முறையை நீக்கி விட்டு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இதுதொடர்பாக எந்தவித தாமதமும் இன்றி மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒத்திவைப்பு
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ஏற்கனவே ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு அமலில் இருப்பதால் அதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதே நேரம் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வருவதற்கு அனுமதி கோரும் மனு மீதான விசாரணை நவம்பர் 4–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement