Ad Code

Responsive Advertisement

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முகாமிட்டு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள்

கடந்த சில வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. 

நடப்பு கல்வி ஆண்டில் காலாண்டு தேர்வு நடந்து முடிந்துள்ளது. அதன் முடிவை பார்த்தபோது 17 மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்தது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கீழ் மட்ட அதிகாரிகள் அளவில் ஆய்வு நடத்தும்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவிட்டார்.

அதிகாரிகள் நேரில் ஆய்வு

அதன்படி இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், ச.கண்ணப்பன், வி.சி.ராமேஸ்வர முருகன் ஆகியோர் மண்டல அளவில் முதன்மை கல்வி அதிகாரிகளை அழைத்து கூட்டம் ஆய்வு நடத்தினார்கள். அதுபோல விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் எம்.பழனிச்சாமி, சி.உஷாராணி, எஸ்.உமா, கருப்பசாமி, நரேஷ், பாலமுருகன், லதா உள்ளிட்ட இணை இயக்குனர்கள் ஆகியோரும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்.

இயக்குனர்களும், இணை இயக்குனர்களும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தக்க ஆலோசனை கூறினார்கள்.

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

தேர்ச்சி பெறுவதில் சந்தேகம் உள்ள மாணவ-மாணவிகளை தரம் பிரித்து அவர்களுக்கு வழக்கமான பள்ளிக்கூடநேரம் முடிந்த பின்னர் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்தி அவர்களை படிக்க வைக்கவேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். மேலும் அதற்காக மாவட்ட அளவில் போடப்பட்டுள்ள கையேடுகளை பின்பற்றி மாணவர்களை படிக்க வைக்கவேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் பாடப்புத்தகத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பற்றியும், மாணவ-மாணவிகளை புரிந்து படிக்கும் படி அறிவுரை வழங்கும் படியும் தலைமை ஆசிரியர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பாடம் எடுக்கும் ஆசிரியர்களிடம் கூட்டத்தில் இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் தெரிவித்த கருத்துக்களை கூறி தேர்ச்சிக்கு வித்திட்டனர். அதன்படி இந்த 17 மாவட்டங்களிலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தனியாக பயிற்சி அளித்து வருகிறார்கள். 

ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள்-மாணவிகளுக்கு, அவர்கள் தேர்வுகளில் அதிக தேர்ச்சி பெற பள்ளிக்கூடங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும் வழக்கமாக கணக்கு, அறிவியல், ஆங்கிலம் பாடங்களில் தோல்வி அடைவோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அந்தந்த பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பணியிடை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement