Ad Code

Responsive Advertisement

நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !

உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.
உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.

சில கல்வி நிறுவனங்கள், ஒரு சில வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அதுபோன்ற கல்வி நிலையங்களில் நீங்கள் உயர்கல்வி பயிலும் போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே உங்களுக்கு கல்விக் கடன் எளிதாக வழங்கப்படும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில 20 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடன் வழங்கப்படும். 

கல்விக் கடன் பெறும் மாணவர், வங்கி கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேகரித்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வங்கி அதிகாரி நேரடியாக கலந்துரையாடுவார். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்பச் சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாடப்பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள்.

வட்டி விகிதம்
மாணவர்கள் பெறும் கல்விக் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் குறைந்த பட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் தொகை இருந்தால், குறைந்தபட்ச வட்டித் தொகையுடன், 1 விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகிதக் கணக்கீடு வங்கிக்கு வங்கி மாறுபடும். ஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன. 

 
கடன் ஜாமீன் 
கல்விக் கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையைப் பொறுத்து அமையும். சொத்து என்றால், வங்கிக் கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்றவையாகும். இவற்றிற்கான ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும். ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருக்குமனால், சில நேரங்களில் மூன்றாம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும். 

 
கடனை திருப்பி அளித்தல்
கடன் தொகையை, படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன.  படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒராண்டிற்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்கக் கூடாது. அதுவும் 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement