Ad Code

Responsive Advertisement

நாளை முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்: விற்பனை ஜரூர்!

தமிழகத்தில், கட்டாய, 'ஹெல்மெட்' சட்டம் நாளை அமலுக்கு வருகிறது. அதனால், அசல் மட்டுமின்றி, போலி ஹெல்மெட் விற்பனையும், இரட்டிப்பு விலைக்கு அதிகரித்து உள்ளது.

* இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும், ஐ.எஸ்.ஐ., தர முத்திரை உடைய ஹெல்மெட் அணிய வேண்டும்.

* ஹெல்மெட் இல்லாவிடில், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு, 206ன் கீழ், ஓட்டுனர் லைசென்ஸ் பறிக்கப்படும். அசல் லைசென்ஸ் எடுத்து வராவிட்டால், 'பைக்' தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு, அந்த எல்லைக்குள் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வைக்கப்படும். அசல் லைசென்ஸ் கொடுத்த பின், வாகனம் ஒப்படைக்கப்படும்.

டுபாகூர் "ஹெல்மெட்'
இந்த விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால், கடந்த ஒரு வாரமாக, ஹெல்மெட் விற்பனையகங்கள் நிரம்பி வழிகின்றன. இதற்கு முன், 650 ரூபாயில் விற்பனையான, ஐ.எஸ்.ஐ., முத்திரை பதித்த தரமான ஹெல்மெட்கள், தற்போது, 850 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ரசீதுடன் விற்பனை செய்யப்படாததால், ஹெல்மெட்டின் உண்மையான விலையை அறிய முடிவதில்லை.

பெரும்பாலான கடைகளில் விலை உயர்ந்த ஹெல்மெட் மட்டுமே இருப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். பிளாட்பாரங்களில் விற்பனை செய்யப்படும் ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய, 'டுபாக்கூர்' ஹெல்மெட்களும், குறைந்தபட்சம், 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, தனியார் நிறுவன ஊழியர்கள் அன்பழகன், சுடரொலி கூறியதாவது:

ஐ.எஸ்.ஐ., முத்திரை உள்ள தரமான ஹெல்மெட்டுகள், கடைகளில் இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலை ஹெல்மெட் கிடைப்பதில்லை. 1,000 ரூபாய்க்கு மேல் விலையுள்ள, ஹெல்மெட் மட்டுமே கிடைக்கிறது.

ஹெல்மெட் சட்டத்தை கட்டாயமாக்கிய அரசு, அதன் விலை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்வதில் அக்கறை செலுத்தி இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஹெல்மெட் விற்பனையாளர்களான முகமது, செந்தில்குமார், சையது ஆகியோர் கூறியதாவது:

கூடுதல் விலைக்கு...
ஹெல்மெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறுவது தவறு. குறைந்த விலையுள்ள ஹெல்மெட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

பெரும்பாலான கடைகளில் தற்போது இருப்பது விலை உயர்ந்த, தரம் நிறைந்த ஹெல்மெட்கள் தான். அவற்றை விற்பனை செய்வதால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறுகின்றனர்.

தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து ஹெல்மெட் கொள்முதல் செய்து, கூடுதல் விலை கொடுத்து வாகனங்களில் கொண்டு வருவதால், அதை ஈடுகட்ட ஒரு சிலர், சற்று விலை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்; இதுதான் உண்மை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement