Ad Code

Responsive Advertisement

கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு

சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.
நலிந்த பிரிவுகள்மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரை, நலிந்த பிரிவினர், 25 சதவீதம் பேருக்கு கட்டணமின்றி சேர்க்கை தர வேண்டும்; அதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும். ஆனால், தமிழக அரசு, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளில், கட்டணமின்றி சேர்க்கை நடத்த உத்தரவிட்டதால், பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.'இலவச மாணவர் சேர்க்கைக்கு நிதி தர முடியாது' என, மத்திய அரசு மறுத்ததால், இரண்டு ஆண்டுகளுக்கான, 96 கோடி ரூபாயை, தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிதி, விரைவில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி, பல சிறுபான்மை பள்ளிகள், சிறுபான்மை அந்தஸ்தை பெறாமலும், கட்டாயக் கல்விச் சட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, இலவச சேர்க்கை வழங்காமல் அலட்சியம் காட்டுவதாக, மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் புகார்கள் குவிந்துள்ளன.
இதுகுறித்து, தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க செயலர் நந்தகுமார் கூறுகையில், ''பல பெரிய தனியார் பள்ளிகள், கட்டாயக் கல்விச் சட்டத்தில் மாணவர்களுக்கு, இடம் தருவதில்லை; அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பல பள்ளிகள் சிறுபான்மை அந்தஸ்தைப் பெறாமல், சிறுபான்மை என, கூறும் நிலை உள்ளது. இதற்கு, கல்வித் துறை அதிகாரிகள் தான் முடிவு கட்ட வேண்டும்,'' என்றார்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கட்டாயக் கல்விச் சட்ட நடைமுறை சிக்கல்கள் குறித்து, உரிய ஆய்வு செய்து வருகிறோம். சிறுபான்மை அந்தஸ்தை பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில் அவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்புவோம்' என்றனர்.
சமூக நோக்குசிறுபான்மைப் பள்ளிகளை உள்ளடக்கிய, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி நிர்வாக சங்க தலைவர் மார்டின் கென்னடி கூறுகையில், ''சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் பட்டியலை, நாங்கள் கல்வித்துறையில் கொடுத்துள்ளோம். சிறுபான்மைப் பள்ளிகளும், சமூக நோக்குடன் தான் செயல்படுகின்றன. சிறுபான்மை அந்தஸ்து பெறாத பள்ளிகள் குறித்து நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது,'' என்றார்.


விதிமுறைகள் என்ன?


* பள்ளி நடத்துவோர் மொழி அல்லது மத சிறுபான்மையினராக இருக்க வேண்டும்.
*சிறுபான்மையினர் நலனுக்காக பள்ளி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*50 சதவீதத்துக்கும் மேலான, சிறுபான்மையினர் பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.
*நிர்வாகம் மற்றும் அறக்கட்டளையில் சிறுபான்மையினரே அங்கம் பெற வேண்டும்.
*அறக்கட்டளை குறிக்கோள் சிறுபான்மையினர் நலனுக்காக இருக்க வேண்டும். 
*நிர்வாகிகளின் சிறுபான்மையினர் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை 
கல்வித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement