Ad Code

Responsive Advertisement

நீக்கப்படுகிறது சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு? அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பல்கலைக்கழகம்

சட்டப் படிப்புகளுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வரும் வயது உச்ச வரம்பை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன், சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், எந்த வயதினரும் சட்டப் படிப்புகளில் சேரக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.


 பிளஸ் 2 முடித்தவுடன் சேரக் கூடிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.- எல்.எல்.பி., பி.காம்.- எல்.எல்.பி. சட்டப் படிப்புகள், பட்டப் படிப்பு முடித்தவுடன் சேரக் கூடிய மூன்றாண்டு பி.எல், எல்.எல்.பி. உள்ளிட்ட சட்டப் படிப்புகள் எனப் பல்வேறு இளநிலை சட்டப் படிப்புகளும், முதுநிலை சட்டப் படிப்புகளும் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. 

 இந்தப் படிப்புகள் அனைத்தையும் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கட்டுப்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சட்டப் படிப்புகள் அனைத்திலும் சேருவதற்கு வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 அதாவது, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 20 ஆகும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு வயது 25 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுபோல மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 ஆகும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு வயது 35 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில், பல்வேறு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இந்த வயது உச்ச வரம்பை நீக்கி உத்தரவிட்டன.

 உடனடியாக பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலும் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நிர்ணயிப்பதைக் கைவிட்டது.

 இருந்தபோதும், தமிழகத்தில் மட்டும் கடந்த 2009-10ஆம் கல்வியாண்டு முதல் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டிலும் இதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

 இதனிடையே, சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கி உத்தரவு பிறப்பித்த அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் மூறையீடு செய்திருந்தது.

 இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, "வயது உச்ச வரம்பை நீக்கி பிறப்பிக்கப்பட்ட அலாகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும்' என உத்தரவிட்டது.

 இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து, தமிழகத்திலும் 2015-16ஆம் கல்வியாண்டு முதல் வயது உச்ச வரம்பை நீக்குவது தொடர்பாக உயர் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதன் காரணமாகவே கடந்த 8-ஆம் தேதி தொடங்க இருந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேதகர் சட்டப் பல்கலைக்கழக உயரதிகாரிகள் கூறியது:
 நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து ஆந்திரம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இந்த வயது உச்ச வரம்பு நடைமுறையைக் கைவிட பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.

 இதற்கான அரசு அனுமதி இன்னும் கிடைக்காததால், 2015-16ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தடைபட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எனவே, திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement