Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி

சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினார்கள்.

பன்றி காய்ச்சல்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பன்றி காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் பள்ளிகளில் ஒன்றாக அமர்ந்து படிக்கும்போது பன்றிகாய்ச்சல் நோய் பரவுவதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது. இதனையடுத்து பன்றிகாய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க பள்ளிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை சமீபத்தில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்ற றிக்கை ஒன்றை அனுப்பியது.

நோய் தாக்கம் குறையவில்லை

அதில், பன்றிகாய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க பள்ளி மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் நோய் பற்றிய தாக்கம் மக்களிடம் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. மாறாக நோய் பற்றிய பயம் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.

இதனால் பெரும்பாலான பெற்றோர் பள்ளிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்கும் வகையில் முகமூடிகளை அணிந்து அனுப்புகிறார்கள். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சில பள்ளிகளில் ஆசிரிய, ஆசிரியைகளும் முகமூடி அணிந்தபடி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள்.

முகமூடியுடன் ஆசிரியர்கள்

இதேபோல சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் பன்றிகாய்ச்சல் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் மாணவ-மாணவிகள் நேற்று முகமூடி அணிந்தபடி வகுப்புகளில் பாடம் படித்தனர். அவர்களுக்கு ஆசிரியர்களும் முகமூடி அணிந்தபடியே பாடம் நடத்தினார்கள்.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பன்றிகாய்ச்சல் நோய் விழிப்புணர்வு சுற்றறிக்கை ஒன்றையும் கையோடு கொடுத்து அனுப்பினர். அதில் பன்றிகாய்ச்சல் நோய் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்ற தகவல்கள் கூறப்பட்டிருந்தது.

நோயை கட்டுப்படுத்த...

இதுகுறித்து கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் பள்ளியின் ஆசிரியை மஞ்சுளா கூறுகையில், “வரும் முன் காப்போம் என்பது போல பன்றி காய்ச்சல் நோய் வராமல் தடுக்க 3 அடுக்குகளை உடைய முகமூடிகளை பாதுகாப்பு கருதி முகத்தில் அணிய வேண்டும் என்று மாணவர்களிடம் அறிவுறுத்தினோம். இந்த நோய் வராமல் தடுக்க மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு எடுத்து கூறியுள்ளோம். இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் எங்கள் மாணவர்களுக்கு நோய் வராமல் தடுக்கமுடியும் என்று நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement