Ad Code

Responsive Advertisement

டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு: ஊழல் இல்லாத மாநிலமாக டெல்லியை உருவாக்குவேன் என பேச்சு

               டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார்| படம்: கமல நரங். டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார்.


அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லியின் 8-வது முதல்வரானார். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் ஆட்சியை கலைத்து சரியாக ஓராண்டு ஆன பின்னர் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அவருக்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியா பதவியேற்றுக் கொண்டார்.

சிசோடியாவைத் தொடர்ந்து ஆசிம் அகமது கான், சந்தீப் குமார், சத்யேந்திர குமார் ஜெயின், ஜிதேந்திர சிங் தோமர், கோபால் ராய் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவிப் பிரமாண நிகழ்ச்சி தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைவடைந்தது.

சந்தீப் குமார், சுல்தான்பூர் தொகுதியில் இருந்தும், சத்யேந்திர ஜெயின், சகூர் பாஸ்தி தொகுதியில் இருந்தும், கோபால் ராய், பாபர்பூர் தொகுதியில் இருந்தும், ஜிதேந்திர சிங் தோமர் திரி நகர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்படனர்.

டெல்லி மக்களுக்காக சேவை செய்வேன்:

பதவியேற்பு விழாவுக்குப் பின்னர், ராம் லீலா மைதானத்தில் பேசிய கேஜ்ரிவால்: "அடுத்த 5 ஆண்டுகள் டெல்லி மக்களுக்காக நான் சேவை செய்வேன். டெல்லி மக்கள் என்னை நேசித்தார்கள் என அறிவேன். ஆனால், இவ்வளவு தூரம் என்னை நேசிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. 70-க்கு 67 என்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி. வாக்கு மழையில் எங்களை மக்கள் நனைய வைத்திருக்கின்றனர். இது ஒரு அற்புதம். இதன் மூலம் இறைவன் எங்களுக்கு எதோ ஒரு சேதி சொல்லியிருக்கிறார். நாங்கள் ஆண்டவன் கட்டளையை நிறைவேற்றும் ஊடாக இருப்போம். பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்" என்றார்.

ஊழல் இல்லாத முதல் மாநிலம்:

டெல்லியை ஊழல் இல்லாத முதல் மாநிலமாக உருவாக்குவேன் என அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் பேசும்போது, "கடந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதும் டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தோம். அப்போது லட்சியம் மட்டுமே இருந்தது. இப்போது எங்களுக்குத் தெரியும், டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவது எப்படி என்பது தெரியும்" என்றார்.

கட்சி பேதமின்றி நடவடிக்கை

டெல்லியில் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எந்தக் கட்சி தொப்பியை தலையில் தாங்கியிருந்தாலும் சரி, கட்சி பேதமின்றி நடவடிக்கை பாயும் என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, "கடந்த டிசம்பர் 28-ம் தேதி நான் கூறியதையே இன்று மீண்டும் தெரிவிக்கிறேன். யாராவது லஞ்சம் கேட்டால் மறுக்காமல், லஞ்சம் கொடுங்கள். அதை அப்படியே உங்கள் மொபைலில் போட்டோ பிடித்துக் கொள்ளுங்கள். நாங்கள் அதன் மீது நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்:

ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் 5 ஆண்டுகள் அளித்துள்ளனர். எனவே ஆட்சிப் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே எங்களை கணிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.

'மாநில அந்தஸ்துக்கான காலம் வந்துவிட்டது'

"பிரதமரை சந்தித்தபோது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வலியுறுத்தியிருக்கிறேன். மத்திய அரசிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வேண்டுமென பிரதமரிடம் வேண்டியுள்ளேன். ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை இருக்கிற்து. இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெறும் காலம் வந்துவிட்டது" என கேஜ்ரிவால் தெரிவித்தார்.

'நான் மக்களின் முதல்வர்'

கேஜ்ரிவால் பேசுகையில், "ஆம் ஆத்மியின் அரசு அனைவருக்குமான அரசு. நீங்கள் வாக்கு அளித்திருந்தாலும், அளிக்காவிட்டாலும் நான் அனைவருக்குமான முதல்வன், மக்களின் முதல்வர். தவறாமல் வரி செலுத்துங்கள். உங்கள் வரிப் பணத்தை நான் நற்காரியங்களுக்கு பயன்படுத்துவேன்" என்றார்.

4000 பேர் பாதுகாப்பு:

டெல்லி, ராம்லீலா மைதானத்தில் 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளளவு 50,000 பேர் என்ற போதும் அதிகளவில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வெளியே மத்திய பாதுகாப்பு படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

67 தொகுதிகளில் வெற்றி:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பாஜக மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement