Ad Code

Responsive Advertisement

குறைந்த விலையில் சிமென்ட் வழங்கும் 'அம்மா சிமென்ட் திட்டம்' செயல்படுத்த முதல்வர் உத்தரவு

 அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்கள் வரிசையில், வீடு கட்டும் பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் சிமென்டினை குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் 'அம்மா சிமென்ட் திட்டம்' எனும் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சிமென்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யும் ’அம்மா சிமென்ட் திட்டம்’ என்னும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி,

1. தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும்.

2. இந்த சிமென்ட் மூட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

3. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிக பட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்ட் பெற்றுக் கொள்ளலாம்.

4. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்ட வரை படத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர் / வருவாய்துறை அலுவலர் / பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர் / பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

5. வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமென்ட் விற்பனை செய்யப்படும்.

6. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.

7. இந்த சிமென்ட் விற்பனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

8. மேலும், மாவட்ட விநியோக மற்றும் விற்பனை சங்கங்களுக்கு சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமென்ட் விற்பனை செய்யும் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.

9. ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமென்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல / மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக தொடர்ந்து செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிட்டங்கிகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்.

10. பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் மூலம் ஒரு மூட்டை சிமெண்ட் 220 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கும் 'அம்மா சிமென்ட்' திட்டத்தின் கீழ் சிமெண்ட் வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் சுமை வெகுவாக குறைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement