Ad Code

Responsive Advertisement

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்?

தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையில் பணியிட ஒதுக்கீடு பெற்றுள்ள 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் முறை மூலம் 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு நடைபெறும்போதே, தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தனி நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.

எனினும், பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வைத் தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் நகல் தாக்கல் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவு காரணமாக பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement