Ad Code

Responsive Advertisement

மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது - பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் சுற்றறிக்கை

மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களுக்கு தண்டனை
பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு தாக்குதல், குனிய வைத்து முதுகு மீது செங்கற்களை வைத்தல் இப்படி பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.

அப்படிப்பட்ட நேரங்களில் சில மாணவர்கள் உயிரிழக்கக்கூடும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது உண்டு.

பள்ளிக்கல்வித்துறை அக்கறை
இப்படி எந்த துன்பமும் மாணவ–மாணவிகளுக்கு நேரக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக மாணவர்களை கம்பு கொண்டு தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்தது.

அதன் காரணமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பிரச்சினை பெரும்பாலும் ஓய்ந்துவிட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது நீடிக்கிறது.

மாணவர்களை ஸ்கேல் கொண்டு தாக்கக்கூடாது
சமீபத்தில் ஸ்கேல் கொண்டு ஆசிரியர் தாக்கியதில் ஒரு மாணவர் கண்பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில் மாணவ–மாணவிகளை எந்த காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், கம்பு, கை உள்ளிட்ட எதைக்கொண்டும் அடிக்கக்கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக உறுதி செய்யப்பட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement