வரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.
நன்னூல் கூறும் நல்லாசிரியர்
பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார்.
1. நிலத்தின் மாண்புகள்:
நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது.
எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது.
மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது.
தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது.
ஆசிரியரின் மாண்புகள்:
தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர்.
தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர்.
தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர்.
தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத் தருபவர்.
2. மலையின் மாண்புகள்:
உருவில் பெரியது. தன்னிடத்தில் பலவிதப் பொருள்களை உடையது.
எந்த வகையான பேராற்றலாலும் கொஞ்சமும் அசைக்க முடியாத அழுத்தம் உடையது.
தூரத்தில் இருப்பவரும், தன்னை எளிதில் காணக்கூடிய பெருமிதத் தோற்றமுடையது.
மழை பொழியாமல் வறண்டு போனாலும், எல்லா உயிர்களுக்கும் தன்னிடமுள்ளதைத் தரவல்ல கொடைப்பண்பு உடையது.
ஆசிரியரின் மாண்புகள்:
கல்வியறிவால் பெருமையுடையவர். புலமையுடைய எவராலும் தம்மை வாதத்தால் அசைக்க முடியாத அழுத்தமுடையவர்.
எண்ணற்ற நூற்பொருள்களை உணர்ந்தவர்.
அவரைக் காணாதவரும் (தூரத்தில் இருப்பவரும்) அவரது புகழைத் தெரிந்துகொள்ளக் கூடிய தன்மையுடையவர்.
மாணவர் தரும் செல்வம் குறைவாகவே இருந்தாலும் தம்மிடமுள்ள குறையாத கல்விச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளித்தரும் கொடையாளி.
3. தராசின் மாண்புகள்:
தராசு ஐயம் இல்லாதபடி, பொருளின் அளவை நடுநிலைமையுடன் நிறுத்துக் காட்டும்.
ஆசிரியரின் மாண்புகள்:
மாணவர்களிடம் சற்றும் சந்தேகம் எழாதபடி பாடங்களைத் தெளிவாகக் கற்பிப்பவர். எல்லோரிடமும் நடுவுநிலைமையுடன் பழகுபவர்.
4. மலரின் மாண்புகள்:
மங்கலமானது.
எல்லாக் காரியங்களிலும் தேவையானது.
எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்பது.
மென்மையானது.
குறித்த பொழுதில் மலர்வது.
ஆசிரியர் மாண்புகள்:
மங்கல காரியங்களில் பங்கேற்பவர்.
எல்லாக் காரியங்களும் நிறைவேற முன்னிற்பவர்.
எல்லோராலும் ஏற்கத்தக்கவர்.
மென்மையான பண்புகளைக் கொண்டவர்.
பாடங்களைக் கற்பிக்கும்போது மகிழ்ச்சியுடன் இருப்பவர்.
இவ்வாறு நிலம், மலை, தராசு, மலர் ஆகிய நான்கு உவமைகளின் வாயிலாக, நல்லாசிரியரின் நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்கள் நன் மாணாக்கர்களை உருவாக்க வழி வகுத்துள்ளார் பவணந்தியார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை