Ad Code

Responsive Advertisement

ஐ.ஏ.எஸ். பணிநிலை என்பது என்ன?

அரசு என்பது ஒரு அறக்கட்டனை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி

இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ்(Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது.


இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே.

அரசு என்பது வேறு. அரசு இயந்திரம் என்பது வேறு. ஏனெனில், ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு அரசாங்கம்(Ministry) எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகிய இரண்டிலும் பணியமர்த்தப்பட முடியும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மத்திய அரசில் பணியமர்த்தப்படுவார் மற்றும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர், சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்றவராக திகழ்கிறார். நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சொல்வதை ஏறக்குறைய 60% இந்திய மாணவர் சமூகம் வழக்கமாக வைத்துள்ளது, பலருக்கு அதைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் இருந்தாலும்கூட.

ஐ.ஏ.எஸ். எனும் பணி

ஐ.ஏ.எஸ். என்பது அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணி என்பதால், ஒரு நேர்மையான அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளை செய்ய முடியும். ஆனால், இப்பணியில் உள்ள அதிகாரம், சலுகைகள், வெகுமதிகள், சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல காரணங்களே, இப்பணிக்கு வர வேண்டும் என்று பலரைத் தூண்டுகிறது.

ஐ.ஏ.எஸ். பணி என்பது இந்திய நிர்வாக கட்டமைப்பில், அதிக அதிகாரத்தையும், அதிக பொறுப்பையும் கொண்டதாகும். மத்திய அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் கேபினட் செயலாளர் என்ற பதவியிலும், மாநில அரசின் உத்தரவுகளை செயல்படுத்தும் தலைமைச் செயலாளர் என்ற பதவியிலும் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே.

ஐ.ஏ.எஸ். பணி நிலைக்கு சமமாக, இந்திய வெளியுறவு பணிகள்(Indian Foreign Service) எனப்படும் பணி உள்ளது. ஆனால், உள்நாட்டு நிர்வாகத்தில் இதற்கு சம்பந்தமில்லை. உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, IAS பணிதான் உயர்ந்தது. இதற்கு அடுத்த நிலையில் ஐ.பி.எஸ்.(இந்திய காவல் பணிகள்) வருகிறது. அதற்கடுத்து IFS(Indian Forest Service) எனப்படும் இந்திய வனப் பணிகள் வருகின்றன.

IAS பணிக்கு தேவையான தகுதிகள்

நேர்மறை எண்ணம்
தலைமைத்துவ பண்பு
ஆளுமைத் திறன்
தைரியம்
உறுதியான மனப்பாங்கு
தன்னம்பிக்கை
ஒவ்வொரு நெருக்கடி சூழலிலும் அமைதியைக் கடைபிடித்தல்
நல்ல தகவல்தொடர்பு திறன்
நல்ல அறிவுத்திறன்
சிறப்பான பொதுஅறிவு

ஐ.ஏ.எஸ். தேர்வெழுதுவதற்கான அடிப்படை தகுதிகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளின் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்தேர்வை எழுதும் ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதலாம். மேலும், பட்டப் படிப்பு இறுதித் தேர்வை எழுதப் போகிறவர்கள் அல்லது எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வின், முதல்நிலைத் தேர்வை(Preliminary) எழுதலாம்.

MBBS அல்லது வேறொரு மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்வோர், அவர்கள் தங்களின் இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்து, அதேசமயம், இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமல் இருந்தாலும், அவர்கள் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வை எழுதலாம். அதேசமயம், அவர்கள், மெயின் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஐ.ஏ.எஸ். தேர்வு, முதல்நிலைத் தேர்வு(Preliminary), மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

பணிகள் மற்றும் பொறுப்புகள்

* தொடர்புடைய அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தனது மாவட்டம் அல்லது பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதில் உதவுதல்.
* மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல். இதன்பொருட்டு, அதுதொடர்புடைய பகுதிகளுக்கு பயணம் செய்து, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறதா என்பதைக் கண்காணித்தல். அதன்பிறகு, நடைபெறும் பணிகள் பற்றி, தொடர்புடைய அமைச்சகத்திற்கு தனது கருத்துக்களை(feedback) தெரிவித்தல்.
* பொது நிதியானது, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முக்கியப் பணியாகும். அதில், ஏதேனும் முறைகேடு நடந்தால், அவர் மாநில சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் பதில்சொல்ல வேண்டியிருக்கும்.
* வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள், துன்பத்திலிருந்து மக்களை மீட்டு, நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
* ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்து, நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுக்க, அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டியுள்ளது.

பணி நிலை

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணித்தன்மை என்பது, பன்முகத்தன்மை வாய்ந்தது, சவால் மிகுந்தது, ஆர்வமூட்டக்கூடியது அதேசமயத்தில் நிறைவுத்தன்மை கொண்டது.

ஒரு இளநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார் மற்றும் அவரும் சீனியர் நிலைக்கு உயரும்போது, கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவரும் சேர்ந்து உருவாக்குகிறார். பொதுத்துறை நிறுவனங்கள் சம்பந்தமான விவகாரங்களை கையாளுதல் உள்பட, பல சிக்கல்களை தீர்த்து வைக்கும் நபராகவும் இருக்கிறார்.

சம்பளம்

ஜுனியர் ஸ்கேல்

Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.5,400

சீனியர் டைம் ஸ்கேல்

Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.6,600

ஜுனியர் Administrative கிரேடு

Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.7,600

Selection கிரேடு

Pay Band - ரூ.37,400 முதல் ரூ.67,000
கிரேடு pay ரூ.8,700

சூப்பர் டைம் ஸ்கேல்

Pay Band - ரூ.37,400 முதல் ரூ.67,000
கிரேடு pay ரூ.10,000

வாய்ப்புகள்

உள்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கிறார்.
நிதித்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு அரசின் அனைத்து நிதி செயல்பாடுகளுக்கும் தலைவர்.
சுருக்கமாக சொல்வதென்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி என்பது, பல்வகை பொறுப்புகளை நிறைவேற்றும் மற்றும் அவற்றை மாறிமாறி மேற்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு பணியாகும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நேரடியாக உதவக்கூடிய ஒரு பணியாகும்.
நாட்டின் உயர்ந்த பதவியாக உள்ள ஐ.ஏ.எஸ்., பணியில் ஒருவருக்கான பொறுப்புகள் எவ்வளவு அதிகமோ, அந்தளவிற்கு சலுகைகளும் அதிகம்.

நாம் செய்ய வேண்டியது

இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டின் நிர்வாகத்தை நடத்துபவர்கள் என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால், சமூகத்திற்கு எத்தனையோ நன்மைகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல தீமைகளும் சமூகத்திற்கு நிகழ்ந்துள்ளன.

எனவே, பெரியளவில் நன்மை செய்ய இயலாவிட்டாலும், முடிந்தளவு, தீமை செய்யாமல் இருப்போம் என்பதை உறுதியாக எடுத்துக்கொண்டு, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகுங்கள் மாணவர்களே!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement